இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல்... எப்போது கிடைக்கும்? முக்கிய தகவல்கள்
டெல்லி: மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரையை ஏற்று, இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அனைத்து நாடுகளும் விரைவாக மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
வல்லுநர் குழு பரிந்துரை
இந்தச் சூழ்நிலையில், ஸ்புடன்விக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக நேற்று மருத்துவ வல்லுநர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி அளிக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது. நாட்டில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில், இந்த அனுமதி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அனுமதி
இந்நிலையில், மருத்துவ வல்லுநர் குழுவின் இந்த பரிந்துரையை ஏற்று, இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு இன்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டாக்டர் ரெட்டி நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி
உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கருதப்படுகிறது. இந்தத் தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்குக் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி ரஷ்யா முதலில் ஒப்புதல் அளித்திருந்தது. இருப்பினும், அப்போது ஸ்புட்னிக் வி தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் பல நாடுகளும் இந்தத் தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளத் தயங்கின.
55 நாடுகளில் ஒப்புதல்
அதன் பின், சில மாதங்களுக்குப் பின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மருத்துவ சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் இந்தத் தடுப்பூசி 91.6% வரை பலனளிக்கும் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கத் தொடங்கின. இதுவரை ஈரான், ஐக்கிய அமீரகம், இலங்கை என 55 நாடுகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளன.
இந்தியாவில் எப்போது கிடைக்கும்
முதல்கட்டமாக ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இறக்குமதி செய்து மத்திய அரசுக்கு வழங்கும். இறக்குமதி தொடங்க 2 முதல் 3 வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய இதுவரை 5 இந்திய நிறுவனங்களுடன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 85.2 கோடி டோஸ்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யவுள்ளது. அதில் பாதி, அதாவது சுமார் 4.25 கோடி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும். இருப்பினும், தடுப்பூசி உற்பத்தியை இந்தியாவில் தொடங் மூன்று மாதங்கள் வரை ஆகும்.