இது ‛‛வெற்றிகரமான தோல்வி’’.. காங். தலைவர் தேர்தலில் தோற்றாலும் சாதித்து காட்டிய சசிதரூர்.. எப்படி?
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேவிடம், திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் தோல்வியடைந்தாலும் கூட ‛‛இது வெற்றிக்கரமான தோல்வி'' எனும் வகையில் அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதுபற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த சாதனை என்ன? என்பது பற்றிய விபரம் வருமாறு:
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி உள்ளார். உடல் நலக்குறைவால் அவரால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல மாநிலங்களில் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இது நீண்டநாட்களாக கிடப்பிலேயே இருந்தது. அதேவேளையில் கட்சிக்குள் பல்வேறு விவாதங்களை கிளப்பியது. ஜி23 எனும் மூத்த தலைவர்கள் அடங்கிய அதிருப்தி அணி உருவாகியது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்
இதற்கிடையே தான் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதியாக அக்டோபர் 17 அறிவிக்கப்பட்டது. இதில் கேரளா திருவனந்தபுரம் எம்பி சசிதரூரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களை எம்பியுமான மல்லிகார்ஜூன கார்கேவும் போட்டியிட்டனர். இதில் சோனியா காந்தியின் ஆதரவு என்பது மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இருப்பதாகவும் அவர் தான் வெற்றி பெறுவார் எனவும் கூறப்பட்டது. அதன்படி கடந்த 17 ம் தேதி தேர்தல் நடந்தது.

மல்லிகார்ஜூன கார்கே வெற்றி
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 9900 ஓட்டுக்களில் சோனியா காந்தி ஆதரவு பெற்ற வேட்பாளரான மல்லிகார்ஜூன் கார்கே 7,897 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் இறங்கிய சசீதரூர் வெறும் 1,072 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். 416 ஓட்டுக்கள் செல்லாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. தீபாவளி முடிந்த பிறகு மல்லிகார்ஜூன கார்கே முறைப்படி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

சசிதரூர் சாதனை
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி காங்கிரஸ் தலைவர் பதவியை பிடித்த 10வது தென்னிந்தியர் என்பதோடு, இந்த பதவியை அலங்கரிக்கும் 2வது தலித் தலைவர் என் பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் சசிதரூர் தோல்வியடைந்தாலும் கூட அவர் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது வெற்றிக்கரமான தோல்வி எனும் வகையில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சாதனை என்ன?
அதாவது கடந்த 1997, 2000ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் 2ம் இடம் பிடித்த வேட்பாளர்களை விட சசிதரூர் அதிக ஓட்டுகள் பெற்று அசத்தியுள்ளார். நேற்று வெளியான தேர்தல் முடிவில் சசிதரூர் 1072 ஓட்டுக்கள் பெற்றதன் மூலம் பதிவான ஓட்டுகளில் மொத்தம் 12 சதவீத வாக்குகளை சசிதரூர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2 முறை காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களில் சசிதரூர் அளவுக்கு ஓட்டுக்களை யாரும் பெறவில்லை

2000ல் நடந்த தேர்தல் முடிவு
அதன்படி கடந்த 2000ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தது. இதில் சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாத் போட்டியிட்டார். இதில் 98.76 சதவீத வாக்குகள் அதாவது 7,448 ஓட்டுக்கள் பெற்று சோனியா காந்தி வெற்றி பெற்றார். ஜிதேந்திர பிரசாத் வெறும் 94 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று படுதோல்வியடநை்தார். இதன்மூலம் தேர்தலில் பதிவான வாக்குகளில் வெறும் 1.24 சதவீத ஓட்டுக்களை மட்டுமே ஜிதேந்திர பிரசாத் பெற்றிருந்தார்.

1997 ல் நடந்த தேர்தல்
முன்னதாக 1997ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மும்முனை போட்டி நடந்தது. சீதாராம் கேசரி, சரத் பவார், ராஜேஷ் பைலட் உள்ளிட்டவர்கள் களத்தில் இருந்தனர். இதில் சீதாராம் கேசரி 6,224 ஓட்டுக்கள் (83.43 சதவீதம்)பெற்று வெற்றி பெற்றார். இதற்கு அடுத்த படியாக 11.82 சதவீதமாக 882 ஓட்டுக்கள் பெற்று சரத் பவார் 2ம் இடம் பிடித்தார். ராஜேஷ் பைலட் 354 ஓட்டுக்களுடன் 4.75 சதவீத ஓட்டுக்களை பெற்றார். அந்த வகையில் தான் முந்தைய 2 தேர்தல்களை ஒப்பிடும்போது சசிதரூர் அதிகளவு ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications