கொரோனா: உயிரிழந்தோருக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம், கடமை மத்திய அரசுக்கு உள்ளது; இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை 6 வாரங்களுக்குள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 3,98,454 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது கோரிக்கை.
இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ4 லட்சம் இழப்பீடு வழங்க கோரி வழக்கறிஞர்கள் கெளரவ் குமார் பன்சால், ரீபக் கன்சால் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். மத்திய அரசு தமது பதில் மனுவில், கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ4 லட்சம் வழங்க போதுமான நிதி இல்லை. மாநிலங்களின் பேரிடர் ஆணையத்தின் மொத்த நிதியையும் இந்த இழப்பீட்டு தொகைக்குதான் செலவிட நேரிடும் என்றும் தெரிவித்திருந்தது.
அத்துடன் காப்பீடு திட்டங்கள்தான் இழப்பீடுகளுக்கான சரியான வழியாக இருக்கும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தமது வாதத்தின் போது தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம், கடமை மத்திய அரசுக்கு உள்ளது; கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்; இழப்பீடு வழங்குவது என்பது அரசின் விருப்பத்தின்படியானது அல்ல- சட்டப்படி கட்டாயமானது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தனர்.
5 கொரோனா நோயாளிகளுக்கு.. மலக்குடல் இரத்தப்போக்கு.. ஒருவர் உயிரிழப்பு.. தலைநகர் டெல்லியில் அதிர்ச்சி!
மேலும் கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை 6 வாரங்களில் வகுக்க வேண்டும் என்றும் இழப்பீடு தொகையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் கொரோனாவால் இறந்தோருக்கான சான்றிதழ்களில் இறப்புக்கு கொரோனா காரணம் என தெளிவாக குறிப்பிட வேண்டும்; கொரோனா இறப்பு சான்றிதழ் நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.