பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி.. இதுக்கு காரணமும் சொன்ன கோர்ட்டு!
டெல்லி: நாட்டில் பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நமது நாட்டில் பிச்சைக்காரர்கள் அதிகம் இருக்கின்றனர்.
கோவில்கள், ரயில், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்களில் பிச்சைக்காரர்கள் அதிகம் ஆக்கிரமித்து இருப்பதை காண முடியும்.
இந்த கொரோனா காலத்தில் பிச்சைக்காரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உணவு இன்றி தவித்த பிச்சைக்காரர்களை போலீசார் மீட்டு உதவி மையங்களில் சேர்த்தனர். பல்வேறு தன்னார்வலர்களும் பிச்சைக்காரர்களுக்கு உணவு வழங்கினார்கள்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் மார்க்கெட், சிக்னல் உள்ளிட்ட பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இவ்வாறு இருக்கும் பிச்சைக்காரர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

தடை விதிக்க மறுப்பு
அப்போது நீதிபதிகள் பொது இடங்களில் பிச்சை எடுக்க கூடாது என்று உத்தரவிட முடியாது என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்கள். பிச்சை எடுப்பவர்கள் யாரும் வசதியானவர்கள் இல்லை. ஏழ்மை தான் ஒருவரை பிச்சை எடுக்க தூண்டுகிறது. யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுக்கவில்லை. தங்களுக்கு அடிப்படை வசதி இல்லாத நிலையில்தான் அவர்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

இந்த நிலைக்கு தள்ளியது யார்?
இது தொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறியதாவது:- சிக்னலில் சிறுவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் என்றால் அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார்? அந்த சிறுவர்களுக்கு கல்வி கொடுப்பது என்பது அரசின் மிக முக்கிய கடமையாகும். பிச்சை எடுப்பவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அவர்கள் நல்ல கவுரவமான முறையில் வாழ வழி செய்ய வேண்டும்.

மறுவாழ்வு மையம்
பிச்சை எடுப்பதற்கு தடை செய்வதை விட பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு மையம் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட போகிறது. மற்றவர்களை போல் பிச்சைக் காரர்களுக்கும் மருத்துவ வசதிகள் பெற முழு உரிமையும் இருக்கிறது. பிச்சை எடுப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதா? என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications