குடியுரிமை திருத்த சட்டம்- சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் செப்.12-ல் விசாரணை
டெல்லி: மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டம்- சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் வரும் 12-ந் தேதி விசாரணை நடத்த உள்ளது.
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து மத ரீதியிலான ஒடுக்குமுறைக்குள்ளாக்கி தப்பி வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமணர்கள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க புதிய சட்டம் வகை செய்கிறது. அத்துடன் மேற்குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்தால் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டது.
மேலும் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாகவோ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் மட்டுமே இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில்தான் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் முதலில் மையம் கொண்டது. பின்னர் வடகிழக்கு மாநிலங்கள் முழுமைக்கும் பரவியது. இதனைத் தொடர்ந்தே நாட்டின் பல மாநிலங்களிலும் சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. வடகிழக்கு மாநிலங்களில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக லட்சக்கணக்கானோர் குடிபெயர்ந்துள்ளனர். சி.ஏ.ஏ. மூலமாக இவர்கள் அனைவருமே இந்திய குடியுரிமையை பெற்றுவிடுவர். இதனால் வடகிழக்கு மாநிலங்களின் பூர்வகுடிகளாக ஆதி பழங்குடி இனத்தவர் மிகவும் சிறுபான்மையினராகிவிடுவர் என்பதாலேயே வடகிழக்கு மாநிலம் சி.ஏ.ஏ.வை கடுமையாக எதிர்க்கிறது. சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் உக்கிரமடைந்த காலத்தில் கொரோனா பரவல் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் சி.ஏ.ஏ. போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
மேலும் சி.ஏ.ஏவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீது வரும் செப்டம்பர் 12-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.