டெல்லியில் அதிக காற்று மாசுபாடு.. மிக மோசமாகவும் நிலைமை.. பள்ளிகளை மூடுவதாக அறிவிப்பு!
டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடரந்து தீராத பிரச்சினையாக உள்ளது. மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
தற்போது AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 382 என்ற மோசமான அளவை எட்டி நிற்கிறது. இது இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அபாயகரமான நிலையாகும்.

டெல்லியில் காற்று மாசுபாடு
வாகனங்கள் மூலம் வெளிப்படும் நச்சுபுகை, டெல்லியை சுற்றி நடைபெறும் கட்டிடப்பணிகளால் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது. டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் பயிர்களின் கழிவுகளை தொடர்ந்து தீ வைத்து எரித்து வருவதாலும் இதுவே காற்று மாசுபாடு உண்டாக்க முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

லாக்டவுன் கொண்டு வரலாம்
சமீபத்தில் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது ''வீடுகளில் கூட நாங்கள் மாஸ்க் அணிந்திருக்கிறோம். அந்த அளவுக்கு நிலைமை சிக்கலாக இருக்கிறது. டெல்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த சரியான திட்டம் வகுக்க வேண்டும் என்று முடிந்தால் டெல்லியில் சில நாட்களுக்கு லாக்டவுன் கொண்டு வரலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பள்ளிகள் மூடப்படும்
இந்த நிலையில் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூடப்படும் என்று டெல்லி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. என்சிஆர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள காற்று தர மேலாண்மை ஆணையத்தின் மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளையும் உடனடியாக மூட சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, மறு உத்தரவு வரும் வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மூடப்படும் என டெல்லி கல்வித்துறை கூடுதல் இயக்குனர் ரீட்டா தெரிவித்துள்ளார்.

ஹரியானா அரசும்...
ஆனாலும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும். கற்றல் நடவடிக்கைகள் மற்றும் போர்டு வகுப்புகளுக்கான தேர்வுகள் முன்பு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா அரசும் திங்கள்கிழமை முதல் குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட் மற்றும் ஜிஜார் ஆகிய நான்கு நகரங்களில் உள்ள பள்ளிகளை மூடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications