சில மாதங்களில் அடுத்த தடுப்பூசி ரெடி... சோதனையை தொடங்கிய சீரம்... அதிரடி காட்டும் ஆதார் பூனவல்லா
டெல்லி: கொரோனா வைரசுக்கு எதிரான அடுத்த தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என்று சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் கொரோனா பரவலின் வேகம் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் அலட்சியப் போக்கு, உருமாறிய கொரோனா ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது
தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், உலக நாடுகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குத் தடுப்பூசி உற்பத்தி இல்லை.
இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியை வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்று சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா அறிவித்துள்ளார். அமெரிக்காவின் நோவோவாக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் இந்தத் தடுப்பூசிக்கு கோவோவாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசியின் முதல்கட்ட சோதனைகள் பிரிட்டனில் நடத்தப்பட்டதாகவும். முதலில் பரவிய கொரோனாவுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி 96% பலன் அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் தடுப்பூசியின் பலன் பிரிட்டன் கொரோனா வகைக்கு எதிராக 86.3% ஆகவும், தென்னாப்பிரிக்க வகைக்கு எதிராக 48.6% ஆகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை இந்தியாவில் கடந்த வாரம் தொடங்கியுள்ளதாகவும் இதில் 1,140 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.