பாகிஸ்தான் தீவிரவாதிகள் 7 பேர் உ.பி.யில் ஊடுருவல்.. அயோத்திக்கு குறி.. உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி: நேபாளம் வழியாக பாகிஸ்தானைச் சேர்ந்த 7 தீவிரவாதிகள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் அயோத்தியை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் ஆங்கில ஊடகத்திற்கு தெரிவித்துள்ள தகவலின்படி, பாகிஸ்தானில் இருந்து ஏழு பேர்அடங்கிய தீவிராத குழுவினர் ஊடுருவியிருப்பதாக தகவல் வந்துள்ளது.
அவர்கள் தற்போது அயோத்தி, பாஸியாபாத், கோரக்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

தீவிரவாதிகள் பெயர்கள்
ஏழு தீவிரவாதிகளில் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் பெயர்விவரம். முகமது யாகூப், அபு ஹம்சா, முகமது ஷாபாஸ், நிசார் அகமது மற்றும் முகமது க்கௌமி சவுத்ரி.

உளவுத்துறை தீவிரம்
அயோத்தி தீர்ப்பு விரைவில் வரவிருப்பதால், புலனாய்வு அமைப்புகள் இந்த ரகசிய தகவலை மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டிருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தகவல் வரவில்லை
இருப்பினும், உ.பி. டிஜிபி ஓ.பி. சிங் அப்படி எந்த ஒரு தகவலும் பெறப்படவில்லை என்று மறுத்தார். "ஏழு தீவிரவாதிகள்" என சந்தேக நபர்களின் குறிப்பிட்ட தகவல்கள் வரவில்லை என்றும் உ.பி.க்குள் அவர்கள் பதுங்கவில்லை என்றும் கூறினார். பொதுவான தகவல்கள் வந்துள்ளன. நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம், ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் டிஜிபி ஓ.பி. சிங் தெரிவித்தார்.

டிஜிபி எச்சரிக்கை
அயோத்தி தீர்ப்பு தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் ஏதேனும் வகுப்புவாதம் அல்லது கலவரங்கள் ஏற்பட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications