கொரோனாவை கட்டுப்படுத்த.. அதிகளவில் வேக்சின் போட தேவையில்லை.. ஸ்மார்ட் நடவடிக்கையே போதும்.. ஐசிஎம்ஆர்
டெல்லி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிகப்படியான மக்களுக்கு வேக்சின் செலுத்துவதைக் காட்டிலும், ஸ்மார்ட் வேக்சினேஷன் அதாவது அதிக ஆபத்தில் இருப்பவர்களுக்கு முதலில் தடுப்பூசிகளைச் செலுத்துவதன் மூலம் உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என ஐசிஎம்ஆர் தனது புதிய ஆய்வில் தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது. கொரோனா பாதிப்பு இவ்வளவு மோசமான நிலைக்குச் செல்ல மந்தமாக நடைபெறும் வேக்சின் பணிகளே முக்கிய காரணம் என கூறப்பட்டது.
இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிய சமயத்தில் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனைக் கடுமையாக விமர்சித்தது.

வேக்சின் பற்றாக்குறை
இந்நிலையில், அதிக ஆபத்தில் இருக்கும் நபர்களுக்கு முதலில் வேக்சின்களை அளிப்பதன் மூலம் கொரோனா பரவலைக் குறைக்க முடியும் என ஐசிஎம்ஆர் புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆரின் அந்த ஆய்வில், கொரோனா வேக்சின் பற்றாக்குறை காரணமாக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய குழுக்கள் அனைவரும் விரைவாக வேக்சின் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஸ்மார்ட் வேக்சினேஷன், அதாவது முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், அடுத்த 60 வயதைக் கடந்தவர்களுக்கும் வேக்சின்களை முதலில் செலுத்த வேண்டும்.

பாதிப்பை குறைக்கலாம்
இந்தியா போன்ற பெரிய நாட்டில் பல தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், பற்றாக்குறை என்பது தொடரும். எனவே, அந்தச் சமயத்தில் அதிக ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு நாம் முதலில் வேக்சின் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 60% தடுப்பாற்றல் கொண்ட தடுப்பூசியை ஆபத்தான நிலையில் இருக்கும் அனைவருக்கும் செலுத்தினால், கொரோனா பாதிப்புகளை 20% வரையும், உயிரிழப்புகளை 29.7% வரையும் குறைக்க முடியும் என ஐசிஎம்ஆர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ளவர்கள்
அதாவது அதிகப்படியான நபர்களுக்கு தடுப்பூசியை அளிப்பதைக் காட்டிலும், முதலில் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு முழுவதுமாக வேக்சின் செலுத்த வேண்டும். அதன் பின்னரே, வேக்சின் பணிகளை விரிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் கொரோனா பாதிப்பையும் சரி, உயிரிழப்புகளையும் சரி பெரியளவில் குறைக்க முடியும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா 3ஆம் அலை
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையால் ஏற்பட்ட பாதிப்புகளே மிக மோசமாக இருந்தது. 2ஆம் அலையில் இருந்து நாம் இன்னும் முழுவதுமாக மீளாத நிலையில், 3ஆம் அலை பற்றிய வெளிவரும் தகவல்கள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இருப்பினும், கொரோனா 2ஆம் அலையை அளவுக்குத் தீவிர பாதிப்பை 3ஆம் அலை ஏற்படாது என்பதே வல்லுநர்களின் கணிப்பு.

தடுப்பூசி பணிகள்
ஆனால், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், இது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. தடுப்பூசிகளே கொரோனாவை வெல்ல ஒரே ஆயுதம் என்றாலும்கூட, அதைச் சரியான நபர்களுக்கு முதலில் அளிப்பதன் மூலம் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் குறைக்க முடியும்.












Click it and Unblock the Notifications