5,000 அடி உயரத்தில்.. ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்குள் திடீரென கிளம்பிய புகை! அலறிய பயணிகள்.. வீடியோ!
டெல்லி: நடுவானில் விமானத்தின் உள்ளே திடீரென புகை கிளம்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விமான பயணம் என்றாலேயே பலருக்கும் ஒரு வித பயம் வந்துவிடும். ஆசையாக விமானத்தில் ஏறினாலும் கூட இந்த பயம் காரணமாக எப்போது இறங்குவோம் என்றே பலருக்கும் தோன்றும்.
அப்படி இருக்கும் போது, விமானத்தில் இருந்து திடீரென புகை கிளம்பினால் எப்படி இருக்கும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில்.. நடுவானில் திடீரென தீ விபத்து! பதறிய பயணிகள்
ஸ்பைஸ் ஜெட்
தலைநகர் டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு இன்று காலை வழக்கம் போல விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது, அந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இருந்து திடீரென புகை கிளம்பியது. விமானம் 5,000 அடி உயரத்தில் இருந்தபோது புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக டெல்லிக்குத் திரும்பியது.
கிளம்பிய புகை
இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "டெல்லியில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூருக்குச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று காலை மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்குப் பாதுகாப்பாகத் திரும்பியது. ஊழியர்கள் 5000 அடியை உயரத்தில் இருந்த போது கேபினில் புகை இருந்ததைக் கண்டனர். இதையடுத்து விமானம் உடனடியாக டெல்லிக்கு திரும்பியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்" என்றார்.
வீடியோ
இது குறித்த வீடியோ ஒன்றையும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்து உள்ளது. அதில் கேபின் உள்ளே திடீரென புகை கிளம்புவது தெளிவாகப் பதிவாகி உள்ளது. விமானம் டெல்லி திரும்பிய பிறகு பயணிகள் வெளியேறும் காட்சிகளும் அதில் இடம் பெற்று உள்ளது. விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவரும் நலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பம்
நடு வானத்தில் திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் சற்று அச்சமடைந்தனர். முதலில் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பின்னர் விமான குழுவினர் நிலைமையை விளக்கி உள்ளனர். இருப்பினும், புகை காரணமாக விமானத்தின் உள்ளே வெப்பம் அதிகரித்து உள்ளது. இதனால் சிலருக்கு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொழில்நுட்ப கோளாறு
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாகத் தரையிறங்குவது கடந்த 15 நாட்களில் இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த ஜூன் 19ஆம் தேதி 185 பயணிகளுடன் டெல்லி நோக்கிச் சென்ற விமானம், பறவை மோதியதைத் தொடர்ந்து அதன் இடது இயந்திரத்தில் தீப்பிடித்ததால், புறப்பட்ட உடனேயே அது மீண்டும் பாட்னாவில் அவசரமாகத் தரையிறங்கியது.