தமிழ்நாடு எல்லையில் ஆபத்து: ஈழத் தமிழர் பகுதியில் இந்தியாவை மிரட்ட சீன ராணுவத்தை குவிக்கும் இலங்கை!
டெல்லி: தமிழ்நாட்டு எல்லையான இலங்கையின் ஈழத் தமிழர் பகுதிகளில் சீன ராணுவத்தை குவிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்பி செல்வம் அடைக்கலநாதன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இலங்கை ராணுவம் குவிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் பகுதிகளில் கூடுதலாக சீன ராணுவத்தையும் குவிப்பதை அனுமதிக்கவே முடியாது என்றும் செல்வம் அடைக்கல்நாதன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்பி நேற்று பேசியதாவது: இந்திய ரோலர் மீன்பிடி படகுகள் ஆதிக்கம் செலுத்துவதால் ஈழத் தமிழ் மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய மீன்பிடி படகுகளால் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எங்களது துயரங்களை இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழ் மீனவரின் வாழ்வாதாரம் மோசமானதாகவே இருக்கிறது. எங்களுக்கு நியாயமான தீர்வை தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். தமிழ்நாட்டு தமிழர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு பயிற்சிகளை அளித்து எங்கள் வளங்களைப் பாதுகாக்க வேண்டும். எங்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது அதை தட்டிக் கேட்கக் கூடிய நாடாக இந்தியா இருக்கிறது என நாங்கள் கருதுகிறோம். எங்கள் நம்பிக்கையின்படி இந்தியா அரசுதான் உரிய தீர்வைப் பெற்றுத் தர வேண்டும்.
தற்போது ஈழத் தமிழ் மீனவர்களை சீனா தம் பக்கம் இழுக்க முயற்சிக்கிறது. இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது. மேலும் சீனா ராணுவத்தினரும் ஈழத் தமிழரின் தாயக நிலமான வடக்கு கிழக்குல் குவிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இலங்கை ராணுவத்தால் வடக்கு கிழக்கு மக்கள் தொடர்ந்து துயரை எதிர்கொண்டு வருகின்றனர். இப்போது சீனா ராணுவமும் குவிக்கப்பட்டால் எங்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிப்படையும். இப்போதும் போர்ச்சூழலில்தான் ஈழத் தமிழர்கள் இருந்து வருகின்றனர். எங்களது தமிழர் வரலாற்றை சிதைக்கவே சீனா ராணுவம் குவிக்கப்படுகிறது. இதனை நாங்கள் ஏற்கவே முடியாது. இவ்வாறு செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்களர் வசிக்கும் தெற்கு பதியில் சீனாவுக்கு பல இடங்கள் நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டு அங்கே சீன ராணுவத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனைப் போலவே ஈழத் தமிழர் பகுதியிலும் சீன ராணுவக் குவிப்பை இலங்கை மேற்கொள்ள இருப்பது தமிழ்நாட்டு எல்லையில் மத்திய அரசுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் பாதுகாப்பு தரப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications