இலங்கை: ராகுல், திருச்சி சிவாவை கொண்ட நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் தரும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
டெல்லி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் தொடர்பாக வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற கலந்தாய்வு குழுவிடம் வரும் 18-ந் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க உள்ளார்.
இலங்கையானது கடந்த பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அண்டை நாடு என்ற அடிப்படையில் மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவிகளை வழங்கி இருக்கிறது. தமிழ்நாடு அரசும் அனைத்து இலங்கை மக்களுக்குமான நிவாரணப் பொருட்களை அனுப்பி உள்ளன.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் சுமார் 4,00,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு மூட்டைகள் வழங்கப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் 11000 மெட்ரிக் டன் அரிசி இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில் இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மா வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் கட்டமாக 9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா, 25 மெட்ரிக் டன் மருந்து பொருட்கள் கடந்த மே மாதம் இலங்கையை சென்றடைந்தது. அடுத்ததாக 2-ம் கட்ட நிவாரணப் பொருட்களை தமிழக அரசு அனுப்பி வைக்க உள்ளது.
இந்நிலையில் இலங்கைக்கான நிவாரணம் மற்றும் கடன் உதவிகள் குறித்து வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற கலந்தாய்வு குழுவிடம் வரும் 18-ந் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க உள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சக செயலாளர் மற்றும் அதிகாரிகளும் வரும் 18-ந் தேதி முற்பகல் 11 மணிக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற கலந்தாய்வு குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திமுக எம்.பி. திருச்சி சிவா, பாஜகவின் ராஜ்தீப் ராய் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.