இந்திய மீனவர்களை இலங்கை அரசு விரைவில் விடுதலை செய்யும்: அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை
டெல்லி: இந்திய மீனவர்களை இலங்கை அரசு விரைவில் விடுதலை செய்யும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அந்த நாட்டு அதிபர் கோத்தபாய ராஜபக்சே, வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்புகளில் இருதரப்பு உறவுகள், மீனவர்கள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
கொரோனா மருந்துகள்
கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று இலங்கை அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளும்.
மீனவர்கள், தமிழர் நலன்
இலங்கை கைது செய்திருக்கும் இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இலங்கையில் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது, 13 அரசியல் சாசன திருத்தம் உட்பட அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுகள் இலங்கையின் எதிர்கால நலனுக்கு உகந்தது.
இருதரப்பு ஒத்துழைப்பு
இலங்கையும் இந்தியாவும் கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் பொருளாதாரம், கேந்திர பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
முதல் பயணம்
இலங்கை பயணம் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்து உபசரித்த வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ்குணவர்த்தனவுக்கு நன்றி. 2021-ம் ஆண்டில் இலங்கைக்குதான் முதல் முறையாக பயணம் செய்திருக்கிறேன். நமது தலைவர்களின் கனவுகளை நிறைவேற்ற இருதரப்பும் இணைந்து செயல்படுவோம் என கூறியுள்ளார்.