கொரோனா வழக்குகள்: உச்சநீதிமன்ற ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஸ்டெர்லைட் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே விலகல்
டெல்லி: கொரோனா வழக்குகள் விசாரணைக்காக உச்சநீதிமன்றத்தில் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஸ்டெர்லைட் (வேதாந்தா) நிறுவனத்தின் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே விலகியுள்ளார்.
கொரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை பற்றாக்குறை தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகளில் மத்திய அரசை நீதிமன்றங்கள் கடுமையாக சாடி வருகின்றன.

இந்த நிலையில் உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் கொரோனா தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும்; இந்த வழக்குக்கு ஆலோசகராக ஹரீஷ் சால்வே நியமிக்கப்படுகிறார் என தலைமை நீதிபதி போப்டே (பாப்டே) தெரிவித்திருந்தார்.
மேலும் ஆக்சிஜன் தயாரிப்புக்காக தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. வேதாந்தா குழுமத்தின் சார்பாக ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடியிருந்தார். இதனால் ஹரீஷ் சால்வே நியமனம் சர்ச்சையானது.
இந்த பின்னணியில், கொரோனா வழக்குகளுக்கான உச்சநீதிமன்றத்தில் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹரீஷ் சால்வே அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தலைமை நீதிபதி பாப்டேவின் நிழலில்தான் தாம் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் கருதுகின்றனர். ஆகையால் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications