பாஜகவுக்கு சு.சுவாமி குட்பை?மமதாவை ஜேபி, மொரார்ஜி தேசாய், ராஜீவ், சந்திரசேகருடன் ஒப்பிட்டு ட்வீட்!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி விலகுவது உறுதியாகி உள்ளதாகவே கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியை மறைந்த தலைவர்களான ஜேபி, மொரார்ஜி தேசாய் உள்ளிட்டோருடன் ஒப்பிட்டு புகழ்ந்து தள்ளியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி இல்லத்தில் இன்று மமதா பானர்ஜியை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேசினார். மத்தியில் ஆளும் பாஜக அரசை மிக கடுமையாக தொடர்ந்து விமர்சித்து வருபவர் சுப்பிரமணியன் சுவாமி.
இதனால் பாஜக தேசிய செயற்குழுவில் இருந்து சுப்பிரமணியன் சுவாமி கழற்றிவிடப்பட்டார். இதனையடுத்து பாஜகவை இடைவிடாமல் விமர்சித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி.
சுமந்த் ராமன் சொன்ன மேட்டர்.. கூல் விளக்கம் திமுக அமைச்சர்.. பரபரக்கும் ட்விட்டர்.. என்னாச்சு?
சு.சுவாமி- மமதா சந்திப்பு
இந்நிலையில் டெல்லியில் மமதாவை சுப்பிரமணியன் சுவாமி இன்று சந்தித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சந்திப்புக்குப் பின்னர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து வரும் கருத்துகள் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் விரைவில் இணைவார் என்பதையே வெளிப்படுத்துகின்றன.
நான் மமதா பக்கம்
மமதாவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சுப்பிரமணியன் சுவாமி. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நீங்கள் இணையப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு நான் எப்போதும் மமதா பானர்ஜியின் பக்கம்தான் இருக்கிறேன் என புதிராக பேட்டியளித்தார்.
சு.சுவாமியின் அடேங்கப்பா புகழாரம்
இதன்பின்னர் தமது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி, தாம் இதுவரை இணைந்து பணியாற்றிய தலைவர்களான ஜேபி (ஜெய்பிரகாஷ் நாராயண்), மொரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, சந்திரசேகர், பி.வி.நரசிம்மராவ் ஆகியோருக்கு இணையானவர் மமதா பானர்ஜி என புகழ்ந்து தள்ளியிருக்கிறார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.
திரிணாமுல் வாய்ஸ்
முன்னதாக மமதா பானர்ஜியின் ரோம் பயணத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்ததை மிகக் கடுமையாக எதிர்த்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்தார் சுப்பிரமணியன் சுவாமி. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும்; மமதா பானர்ஜிக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் போல பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.