மணிப்பூர் இணைய சேவை துண்டிப்பு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: மணிப்பூரில் இன வன்முறைகளால் இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மக்களிடையே ஒரு மாத காலத்துக்கும் மேலாக மோதல் நீடிக்கிறது. மணிப்பூரில் தொடர் வன்முறைகளால் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது வாழ்விடங்களில் இருந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் மத்திய அரசு அமைதி முயற்சிகளை மேற்கொண்ட போதும் வன்முறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குக்கி இன மக்கள் ஆயுதமேந்தி, பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த இருவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த 6-ந் தேதி இவ்வழக்கை தொடர்ந்திருந்தனர். மணிப்பூரில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதால் இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளதாக அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தில் கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகள் அனிருத்தா போஸ், ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர்கள் வலியுறுத்தினர். ஆனால் இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது உச்சநீதிமன்றத்தில் ஏன் வழக்கு தொடரப்பட்டது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications