பிணத்தை ஆற்றில் வீசியதை காட்டிய சேனல் மீது தேச துரோக கேஸ் போட்டாச்சா? உச்சநீதிமன்றம் "நறுக்" கேள்வி
டெல்லி: "உத்தர பிரதேசத்தில், கொரோனாவால் இறந்தவர் சடலத்தை ஆற்றில் வீசி எறியும் காட்சியை வெளியிட்ட செய்தி சேனலுக்கு எதிராக, தேசத் துரோக வழக்கு பதிவு செய்தீர்களா என்று தெரியவில்லையே" என்று, கிண்டலாக கேள்வி எழுப்பினார், உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒவ்.சந்திரசூட்.
நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் அமர்வு, மத்திய அரசின் கொரோனா நிர்வாகம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதுதான், இப்படி ஒரு "கமெண்ட் பாஸ்" செய்தார் நீதிபதி சந்திரசூட்.
உத்தர பிரதேச மாநில அரசு
கொரோனா தொடர்பாக உதவிகள் கேட்போர், அரசை குற்றம் சாட்டுவோரை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சோஷியல் மீடியாவில், தவறான தகவலை கூறினால், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று அந்த மாநில அரசு எச்சரித்துள்ளது.
குற்றச்சாட்டுகள்
உத்தர பிரதேசத்தில் தற்போது கொரோனா தொற்று சற்று குறைகிறபோதிலும் அங்கு மோசமான மருத்துவ கட்டமைப்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பு அதிகரித்து வருவது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. புண்ணிய நதிகளான யமுனை, கங்கையிலும் சடலங்கள் மிதந்து வரும் அவல நிலை நீடித்து வந்தது.
ஆளும் கட்சி எம்எல்ஏ குற்றச்சாட்டு
உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ ராகேஷ் ரத்தோர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது ''எம்.எல்.ஏக்கள் தங்கள் மனதில் உள்ளதை பேச முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கடந்த காலங்களில் நான் கேள்விகளை எழுப்பியிருப்பது உங்களுக்குத் தெரியும். மாநிலத்தின் கொரோனா நிலை பற்றி என்னை போன்ற எம்.எல்.ஏ.க்கள் அதிகம் பேசினால் நாங்கள் தேசத்துரோகிகளாகி விடுவோம்.எங்கள் மீது தேசத் துரோக வழக்கு பாயும்" என்று தெரிவித்தார்.
தேசத் துரோக வழக்கு
இப்படியான நிலையில்தான், செய்தி சேனல் ஒன்றில், உத்தர பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் சடலத்தை ஆற்றில் வீசுவது போல காட்சிகள் காட்டப்பட்டன. இதை குறிப்பிட்டுதான், நீதிபதி சந்திரசூட் இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தாவை நோக்கி அந்த செய்தி சேனலுக்கு எதிராக தேசத் துரோக வழக்குப் பதிவு செய்தீர்களா எனக் கேள்வி எழுப்பினார். இதன் மூலம், கருத்துரிமைக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டி கிண்டல் செய்த நீதிபதி, இனிமேல் இதுபோல நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கான அழுத்தமான கருத்தாகவும் இதை முன்வைத்துள்ளார்.
மக்களின் சுதந்திரம்
கொரோனா தொடர்பான விஷயங்களுக்கு, சமூக ஊடகங்கள் வழியாக உதவி கோருபவர்களுக்கு எதிராக அரசுகள் வழக்குகளை பதிவு செய்வதை நீதிமன்றம் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. இந்த வழக்கு ஏப்ரல் 30 ம் தேதி விசாரிக்கப்பட்டபோது, "குடிமக்கள் தங்கள் நோய் சிகிச்சை தொடர்பான குறைகளை, விமர்சனங்களை சமூக ஊடகங்களில் தெரிவிப்பதில் எந்தவிதமான தடையும் இருக்க கூடாது. அப்படி தடை விதிக்கும் அதிகாரிகளின் எந்தவொரு நடவடிக்கையும் நீதிமன்ற அவமதிப்பு என்று கருதப்படும்," என்று, இதே பெஞ்ச் குறிப்பிட்டு அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.