19 வயது பெண் கொடூர பலாத்கார கொலை! வேட்டைமிருகங்கள் என கண்டித்த ஐகோர்ட்! விடுதலை செய்த உச்சநீதிமன்றம்
டெல்லி: 19 வயது இளம் பெண்ணை கொடூரமாகப் பலாத்காரம் செய்த வழக்கில், மூன்று பேரை உச்ச நீதிமன்றம் விடுவித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளித்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதற்கு நேர்மாறான தீர்ப்பை அளித்து உள்ளது.

19 பெண் பலாத்காரம்
கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 வயது இளம் பெண்ணின் சடலம் சிதைக்கப்பட்டு, பாதி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண் கடத்தப்பட்டு இருந்த நிலையில், சில நாட்களுக்குப் பின்னர் ஹரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் ஒரு வயல்வெளியில் அந்தப் பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. அந்த பெண்ணின் உடலில் மிக மோசமான காயங்கள் இருந்தது.

கொடூர கொலை
கார் கருவிகள் மூலம் அந்த பெண் தாக்கப்பட்டு இருந்தார். மேலும், மண் பானைகளால் கொண்டும் அந்த பெண்ணை அடித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லி நஜப்கரில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த இளம்பெண்ணைக் கடத்திய கொடூரர்கள் பலாத்காரம் செய்து கொன்று அந்த பெண்ணின் உடலை எரித்துள்ளனர்.

மரண தண்டனை
இந்தச் சம்பவம் தொடர்பாக ரவிக்குமார், ராகுல், வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டன. இவர்களைக் குற்றவாளிகளாக அறிவித்த மீது டெல்லி நீதிமன்றம் கடந்த 2014 பிப்ரவரியில் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர்கள் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த போதிலும், உயர் நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது. குற்றவாளிகள் தெருக்களில் இரை தேடும் வேட்டைக்காரர்கள் என்றும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து இருந்தது.

டெல்லி ஐகோர்ட்
டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தங்கள் தண்டனையைக் குறைக்குமாறு மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தூக்குத் தண்டனையை ரத்து செய்வதில் டெல்லி போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குற்றவாளிகள் அந்த பெண்ணுக்கு எதிராக மட்டும் குற்றஞ்செய்யவில்லை என்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்ததாக அவர்கள் தெரிவித்தனர். குற்றத்தின் கொடூரத்தை மேற்கோள் காட்டிய போலீசார், சலுகை வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விடுவிக்க உத்தரவு
குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அவர்களின் வயது, குடும்பப் பின்னணி மற்றும் கடந்தகால கிரிமினல் பின்னணியைச் சுட்டிக்காட்டி தண்டனையைக் குறைக்கும்படி வாதிட்டனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இந்தியத் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, மூவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

கண்ணீர்
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைக் கேட்டு தாங்கள் உடைந்துவிட்டதாகச் சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர். அதேநேரம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை சட்டப் போராட்டத்தைத் தொடருவோம் என்றும் உறுதியளித்தனர். மேலும் குற்றவாளிகள் நீதிமன்ற அறைக்குள்ளேயே தங்களை அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டினர்.












Click it and Unblock the Notifications