"நிம்மதி.." அண்ணாமலை மீதான வழக்கு.. விசாரணைக்கு தடை விதித்த சுப்ரீம் கோர்ட்! பின்னணி என்ன
டெல்லி: அவதூறு வழக்கில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த நிலையில், இதில் உச்ச நீதிமன்றத்தில் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த அக். மாதம் "பேசு தமிழா பேசு" என்ற யூடியூப் சேனலுக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கத்தில் தான் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
வழக்கு: இந்த விவகாரத்தில் சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்தார். இரு மதத்திற்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தகவலைப் பரப்புவதாகவும் இதனால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம் அண்ணாமலை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு தர வேண்டும் என்றும் அண்ணாமலை சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். அதில் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, தமது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பப்பட்ட போதும், அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தர். இதனால் வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
உத்தரவு: இருப்பினும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்ய மறுத்து அண்ணாமலை மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், அண்ணாமலையின் பேச்சு குறித்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கைச் சேலம் கீழமை நீதிமன்றம் பரீசிலிக்கும் என உத்தரவிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேல்முறையீடு: சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலை தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முக்கிய உத்தரவை பிறப்பித்ததுள்ளது. இதற்கிடையே அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு அண்ணாமலைக்கு நிம்மதி தருவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications