ஜோதிமணி உட்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்களின் சஸ்பெண்ட் ரத்து! பதாகைகளுடன் வராதீர்கள்: சபாநாயகர் வார்னிங்
டெல்லி: லோக் சபாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்பி-க்களின் இடைநீக்கத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. அதில் அக்னிபாத் திட்டம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும் நிலை உருவாகியது. கடந்த வாரம் முழுவதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்ட நாடாளுமன்ற அலுவல் பாதிக்கப்பட்டது.
அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் குணமடைந்து அவை திரும்பிய பின் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் சார்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இருந்தும் கடந்த 25ம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கிய போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதாகைகளுடன் கடுமையான அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அவை செயல்பட விடாமல் அவைத் தலைவரின் இருக்கை முன்பு நின்று பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் லோக் சபா உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்படுவதாக ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்த நான்கு எம்பி-க்களும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 27 எம்பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பி-க்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் இடைநீக்கத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அளித்த உத்தரவாதத்தை ஏற்று இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவைக்கு பதாகைகளுடன் வரக் கூடாது. அப்படி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.