ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க அப்பல்லோ நிர்வாகம் முட்டுகட்டை: ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு
டெல்லி: ஆறுமுகசாமி ஆணைய வழக்கை விசாரணைக்கு எடுக்க விடாமல் அப்பல்லோ நிர்வாகமும், வழக்கறிஞரும் முட்டுக்கட்டை போடுவதாக உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணைய தரப்பு வழக்கறிஞர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் நடத்தும் விசாரணைக்கு தடைகோரிய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் மனு மற்றும் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அப்பல்லோ மருத்துவமனை தரப்புக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், இந்த வழக்கு வாதம் இன்று முடிவடையாது, ஏனெனில் தங்களது தரப்பு வாதம் முடிவடைய சில தினங்கள் ஆகும், எனவே வேறு ஒரு தேதிக்கு மாற்ற வேண்டும், அடுத்த வாரம் தனக்கு தனிப்பட்ட வேலை உள்ளதால் வழக்கை தசரா விடுமுறைக்கு பின் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போதே கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி.. மாஜி ஊராட்சி தலைவர் பகீர்
இடைக்கால தடை நீக்கம்
ஆனால், ஆறுமுசாமி ஆணையம் மற்றும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர்நாப்டே, இந்த வழக்கில் வாதிடுவதற்கு ஒன்றுமே இல்லை, ஏற்கனவே அனைத்தும் முடிந்து விட்டது, ஆணைய விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே இன்றைக்கே, வழக்கை விசாரணை செய்ய வேண்டும், மேலும், இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.
எதிர்தரப்பு கோரிக்கை சரியில்லை
மேலும் , எப்போதும் ஒரு வழக்கில் வாதம் செய்ய தயாராக இருக்க வேண்டும், எனவே எதிர்தரப்பினரது கோரிக்கை முற்றிலும் சரியானது அல்ல,
இந்த வழக்கு விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது என குற்றம்சாட்டினார்.
அப்பல்லோ நிர்வாகம்
ஆறுமுகசாமி ஆணையம் கிட்டதட்ட அனைத்தையும் விசாரித்து முடித்து விட்ட நிலையில், இந்த ஒரு வழக்கில் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவால் ஆணையத்தின் பணிகள் நிறைவடையாமல் இருக்கிறது. வேண்டுமென்றே வழக்கை விசாரணைக்கு எடுக்க விடாமல் அப்பல்லோ நிர்வாகமும், வழக்கறிஞரும் முட்டுக்கட்டை போடுகின்றனர் என பகிரங்கமாக தெரிவித்தார்.
வழக்கறிஞர் ரெடியாக இல்லை
ஆனால், நீதிபதிகள் இந்த வழக்கு அக்டோபர் 20க்கு ஒத்திவைத்து விரிவாக விசாரிக்கலாம் என தெரிவித்தனர். ஆனால், தமிழக அரசு/ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் ஒவ்வொரு முறையும் இவ்வாறு தான் கூறப்படுகிறது, ஆனால் வழக்கு விசாரணைக்கு வரும்போது வாதிட வழக்கறிஞர் தயாராக இல்லை. போதிய நேரம் இல்லை என பல காரணங்கள் கூறி வழக்கு விசாரணை தள்ளி போகிறது, எனவே இது முறையல்ல என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்கு வலியுறுத்தல்
இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், ஆறுமுகசாமி ஆணைய தரப்பு வழக்கறிஞரை சமாதனம் செய்ததோடு, 20ம் தேதி வழக்கு விரிவாக நிச்சயம் விசாரணைக்கு எடுக்கப்படும் என உறுதியளித்து வழக்கை ஒத்திவைத்தனர். அப்போது ஆறுமுகசாமி ஆணைய தரப்பு வழக்கறிஞர், அக்டோபர் 20ம் தேதியாவது இந்த வழக்கை விசாரணை பட்டியலில் முன்னதாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.