வங்கத்தில் சிஏஏ வாக்குறுதி; ஆனால் அசாமில் இல்லை; தேர்தல் அறிக்கையில் மாற்றி, மாற்றி கூறியுள்ள பாஜக!
டெல்லி: தமிழகம் , கேரளம் உள்பட 5 மாநில தேர்தல் அறிக்கையில் வாக்குகளை குறி வைக்க பாஜக ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. ஆனால் அசாம் தேர்தல் அறிக்கையில் சிஏஏ அமல்படுத்தப்படும் என்று பாஜக கூறவில்லை.
தமிழகம் , கேரளம், மேற்கு வங்கம், புதுவை மற்றும் அசாமில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
5 மாநில தேர்தல்
இதில் அசாமில் ஆட்சியில் இருந்து வரும் பாஜக அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்புடன் செயல்படுகிறது. இங்கு வெற்றி பெற பாஜக அதிக சிரத்தை எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் தமிழகம் உள்பட மற்ற 4 மாநிலங்களில் வெற்றி பெற பாஜக கொஞ்சமல்ல, மிக அதிகமாக உழைக்க வேண்டும்.
பாஜக நிலை கவலைக்கிடம்
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை பாஜக ஆட்சியை பிடிக்க சமீபகாலமாக கட்சிதமாக காய் நகர்த்தி வந்தது. கருத்துக்கணிப்புகளும் பாஜகவுக்கு சாதமாக உள்ளன. புதுச்சேரியில் பாஜக-என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும் என்று கருத்துக்கணிப்புகள் அடித்து கூறுவதால் பாஜக உற்சாகத்தில் உள்ளது. ஆனால் தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜகவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது .
தேர்தல் அறிக்கையில் முரண்பாடு
இந்த இரண்டு மாநிலங்களில் கருத்துக்கணிப்புகளும் பாஜக கவலைக்கிடமாக உள்ளதையே எடுத்துக் காட்டுகின்றன. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் கால்களை வலுவாக ஊன்ற சில ராஜதந்திர நடவடிக்கையை எடுத்துள்ளது. சமீபத்தில் இந்த 5 மாநிலங்களிலும் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பாஜகவின் சாமர்த்தியத்தை தெளிவாக காட்டுகிறது. வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும், அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று இந்த மாநிலங்களிலும் தேர்தல் அறிக்கையில் பொதுவாக உள்ளன.
வங்கத்தில் சிஏஏ, அசாமில் இல்லை
ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜக தேர்தல் அறிக்கையில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. ஆனால் அசாம் தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று பாஜக கூறவில்லை. அசாமில் 2019 டிசம்பரில் சிஏஏ அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாஜக அரசு வலுவான உள்ளூர் போராட்டங்களை எதிர்கொண்டது.
வாக்காளர்கள் குறி வைப்பு
சர்பானந்தா சோனோவால் அரசுக்கு எதிராக இந்த எதிர்ப்பு மிகவும் வலுவாக உள்ளது. இதனை எல்லாம் கருத்தில் கொண்டே மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் பாஜக சிஏஏ குறித்து அசாமில் அறிவிக்கவில்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் 1 கோடிக்கு மேற்பட்ட மத்துவா சமூக வாக்காளர்கள் இருப்பதால் அந்த வாக்குகளை கவருவதற்காக சிஏஏவை உடனைடியாக அமல்படுத்த பாஜக முடிவு செய்தது.
கேரள தேர்தல் அறிக்கை
இதேபோல் பாஜக தமிழக தேர்தல் அறிக்கையில் இறைச்சிக்காக பசுக்கள் கடத்துவது தடுக்கப்படும். இந்த பசுக்கள் மீட்கப்பட்டு கோவில் கோசாலைகளில் அடைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் பக்கத்தில் மிக நெருக்கமாக உள்ள கேரளாவில் பசுக்கள் கடத்தல் தடுப்பு சட்டம் இயற்றப்படும் என்று கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் கூறவில்லை.
பசுக்கள் கடத்தல் சட்டத்திலும் முரண்பாடு
ஏனென்றால் மாட்டிறைச்சி என்பது கேரளாவில் மிக முக்கியமான பிரதானமான உணவாகும். 2011-12 ஆம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டை (தோராயமாக 40 லட்சம்) ஒப்பிடும்போது கேரளாவில் 80 லட்சம் பேர் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் உள்ளனர்.இதனை கருத்தில் கொண்டே கேரளாவில் இறைச்சிக்காக பசுக்கள் கடத்துவது தடுக்கப்படும் என்று கேரள தேர்தல் அறிக்கையில் பாஜக அறிக்கவில்லை. இவ்வாறு வாக்குகளை குறிவைத்து பாஜக ராஜதந்திரமாக தேர்தல் அறிக்கையை கையாண்டுள்ளது.