ஒரே தீர்ப்பாயத்தால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாட்டில் மாற்றமில்லை.. மத்திய அரசு
Recommended Video
டெல்லி: நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இடையே நிலவி வரும் நதிநீர் பிரச்னைகளை தீர்க்க ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா, நேற்று மக்களவையில் நிறைவேறியுள்ளது.
இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் இருக்காது என, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் நதிநீர் பிரச்னைகளை தீர்க்க ஒரே தீர்பாயம் அமைக்கப்பட்டாலும், காவிரி ஆணையத்தின் பணி தொடரும் என்றார். ஒரே தீர்ப்பாய மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகும் தற்போதைய நிலையே தொடரும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
தற்போது மக்களவையில் நிறைவேறிய ஒரே தீர்ப்பாய மசோதாவில் நதிநீர் பிரச்னை தொடர்பாக மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கும் எவ்வித முன்மொழிவும் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் இந்த மசோதாவில் தற்போதைய சட்டப் பிரிவு 6 ஏ எந்த வகையிலும் மாற்றப்படவில்லை. நதி நீர் தொடர்பாக பிரிவு 6ஏ படி 1980-வது சட்டத் திருத்தத்துக்குப் பிறகு எந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறதோ, அதாவது நர்மதை நதிநீர் மேலாண்மைக்கான அமைப்பு போன்ற ஆணையங்கள் முன் போலவே செயல்படும்.
அதன் செயல்பாட்டில் எந்த மாறுதலும் இருக்காது என கூறியுள்ளார் நதிநீர் பங்கீடு தொடர்பாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு இந்த மசோதா தீர்வளிக்கும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். ஒரே தீர்ப்பாயத்தின் தலைவராக, உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார். ஒவ்வொரு நதிநீர் பிரச்னைக்கும் தீர்வு காண்பதற்கு தனித்தனி அமர்வுகள் அமைக்கப்படும்.
இந்த அமர்வுகள் இரு ஆண்டுகளில் தீர்ப்பு வழங்க வேண்டும். ஒரு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட அமர்வு கலைக்கப்படும். அந்த அமர்வு பிறப்பிக்கும் உத்தரவுகள் உடனடியாக அரசிதழில் வெளியிடப்படும் என விளக்கமளித்துள்ளார்.