தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு.. முக்கிய தலைவர்கள் ஆப்சென்ட்.. காரணம் இதுதான்
டெல்லி: ஐந்து மாநிலச் சட்டசபை தேர்தல்கள் நெருங்கும் நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசின் 2021-22ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு குடியரசு தலைவரின் உரையுடன் கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கியது.
பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்ற முதல் அமர்வில் மத்திய அரசின் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதன் பின்னர், சில காலம் இடைவெளிக்குப் பின்னர், இன்று நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்குகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் நிதி மசோதா மானியக் கோரிக்கைகளில் அறிவிக்கப்பட்ட பல புதிய வரி திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும். மேலும், மின்சார சட்டத் திருத்த மசோதா, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா, உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மசோதா உள்ளிட்ட புதிய மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஐந்து மாநில தேர்தல்கள் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ளதால், இது பட்ஜெட் கூட்டத்தொடர் குறுகிய காலமே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முக்கிய தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்காக பிரசாரம் செய்து வருவதால், அவர்கள் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த மக்களவை உறுப்பினர்கள் 9 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மக்களவை சிறிது நேரம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.