இந்தியாவில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா.. ஒரு டோஸ் பாதுகாப்பை தராது.. 2 டோஸ்கள் தேவை.. யுகே தகவல்
டெல்லி: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 உருமாறிய கொரோனா வகைக்கு எதிராக "வலுவான பாதுகாப்பை" வழங்க 2 கொரோனா டோஸ்கள் தேவை எனப் பிரிட்டன் நாட்டின் சுகாதாரத் துறையின் தரவுகளில் குறிப்பிட்டுள்ளது.
Recommended Video
உலகில் தற்போது கொரோனா வைரசின் பாதிப்பு கொடூர தாக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் இந்த உருமாறிய கொரோனா வகைகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதைச் சவால் நிறைந்ததாக ஆக்கியுள்ளது.
ஏனென்றால், தற்போது வரை நாம் பயன்படுத்தும் பெரும்பாலான தடுப்பூசிகள் உருமாறிய கொரோனா வகைகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டவை. எனவே, அவை உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகச் செயல்படுமா என்பதில் அனைவரும் சந்தேகம் உள்ளது.
2 டோஸ்கள் கட்டாயம் தேவை
இந்நிலையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 உருமாறிய கொரோனா மற்றும் தடுப்பூசிகள் குறித்து பிரிட்டன் நாட்டின் சுகாதார துறையின் தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் B.1.617.2 உருமாறிய கொரோனா வகைக்கு எதிராக வலுவான ஒரு பாதுகாப்பைப் பெற 2 கொரோனா தடுப்பூசிகள் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பணிகள்
இந்தியாவில் தற்போது இந்த B.1.617.2 உருமாறிய கொரோனா தான் வேகமாகப் பரவும் நிலையில், இது கவலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில் தற்போது வரை வெறும் 4.30 கோடி பேர், அதாவது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 3% மக்கள் மட்டுமே 2 டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல 15.19 கோடி மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வளவு பலன்
B.1.617.2 உருமாறிய கொரோனா , பிரிட்டன் நாட்டில் முதலில் கண்டறியப்பட்ட B.1.1.7 கொரோனா வகைகளுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் பைசர் தடுப்பூசிகள் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பிரிட்டன் சுகாதாரத் துறை ஆராய்ந்துள்ளது. அதில் தடுப்பூசியின் 2 டோஸ்கள் B.1.617.2 உருமாறிய கொரோனாவுக்கு எதிராக 81% மற்றும் B.1.1.7 உருமாறிய கொரோனாவுக்கு எதிராக 87% வரை பாதுகாப்பு தருவது தெரியவந்துள்ளது.
குறைகிறது
அதேநேரம் தடுப்பூசியின் ஒரு டோஸ் செயல்திறன் B.1.617.2 உருமாறிய கொரோனாவுக்கு எதிராக 33% மற்றும் B.1.1.7 உருமாறிய கொரோனாவுக்கு எதிராக 51%ஆகக் குறைவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவை எந்தளவுக்குக் முக்கியமானது என்பது தெளிவாகத் தெரிகிறது.
கால இடைவெளி அதிகரிப்பு
இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் மூலம் தடுப்பூசி பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த வாரம் தான், அதிக பலன் கிடைக்கும் என்பதால், பிரிட்டன் நாட்டில் கிடைத்த ஆய்வுகளின் அடிப்படையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ் கால இடைவெளியை மத்திய அரசு 12 முதல் 16 வாரங்களாக அதிகரித்தது. அதேநேரம் தான், பிரிட்டன் அரசு விரைவாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள 2 டோஸ் கால இடைவெளியை 8 முதல் 12 வாரங்களாகக் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.