அடப்பாவிகளா.. தீயணைப்பு கருவியை ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி விற்பனை.. 3 பேரை தூக்கிய போலீசார்!
டெல்லி: தீயணைப்பு கருவி சிலிண்டர்கள் மீது வர்ணம் பூசி அதனை ஆக்சிஜன் சிலிண்டர்கள் என்று விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று முன்பை விட உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 லட்சத்துக்கு மேற்பட்ட பாதிப்புகளும், 3,500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
'ஆக்சிஜன்' பற்றாக்குறை காரணமல்ல - முடிவுக்கு வந்த திருப்பத்தூர் ஜி.ஹெச் 'திக்திக்' பின்னணி
ரெம்டெசிவர் தட்டுப்பாடு
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால் ஏராளமான நோயாளிகள் பலியாகி வருகின்றனர் . கொரோனா சிகிச்சைக்கு தேவையான ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடும் பல இடங்களில் நிலவி வருகிறது. இதனால் ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி அதிக விலைக்கு விற்ற பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் விற்பனை
இந்த நிலையை சாதகமாக பயன்படுத்தி ஆக்சிஜன் சிலிண்டர்களையும் பலர் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தீயணைக்கும் கருவியை ஆக்சிஜன் சிலிண்டர் என்று விற்பனை செய்துள்ள சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லி அலிபூர் பகுதியில் தீயணைக்கும் கருவியில் வர்ணம் பூசி அதனை ஆக்சிஜன் சிலிண்டர்களாக மர்ம நபர்கள் விற்று வருவதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் முகேஷ் கன்னா என்பவர் ஃபார்ஷ் பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
வர்ணம் பூசி மாற்றினார்கள்
அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றபோது மக்களை ஏமாற்றி போலி சிலிண்டர்களை விற்பது தெரியவந்தது. இது தொடர்பாக ரவி ஷர்மா (40), முகமது அப்துல் (38), ஷம்பு ஷா (30) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் தீயணைப்பான் கருவி மீது ஆக்சிஜன் சிலிண்டரில் இருப்பது போல் வர்ணம் பூசுவார்கள்.
ரூ.13,000-க்கு விற்பனை
பின்னர் அதனை ஆக்சிஜன் சிலிண்டர் என்று கூறி 4.5 லிட்டர் சிலிண்டர்களை ரூ .5,500 முதல் ரூ .13,000 வரை விற்று வந்துள்ளனர். கைது செய்யப்ட்டவர்களிடம் இருந்து 532 தீயை அணைக்கும் வாயு சிலிண்டர்கள், 26 ஆக்ஸிஜன் வாயு சிலிண்டர் முனைகள், பெயிண்ட் டப்பாக்கள் மற்றும் 50,000 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். காலாவதியான தீயை அணைக்கும் சிலிண்டர்களை சேகரித்து அதனை ஆக்சிஜன் சிலிண்டர்களாக மாற்றி பலரை ஏமாற்றி விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது.