சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. "ரியல் இந்து கட்சி நாங்கள்தான், பாஜக இல்லை.." விளாசும் திரிணாமுல்
டெல்லி: 5 மாநில தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்துக்களுக்கான உண்மையான கட்சி திரிணாமுல் காங்கிரஸ் தான் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜக தான் ஆளும் கட்சியாக உள்ளது. இந்த மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாக உள்ளது.
மாநில கட்சிகள்
அதேபோல இந்தத் தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளுக்கும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த இரு கட்சிகளும் தங்கள் மாநிலங்களைத் தாண்டி கட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. குறிப்பாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கோவா மாநிலத்தில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து திரிணாமுல் காங்கிரசுக்கு முக்கிய தலைவர்கள் சிலர் வந்துள்ளது அக்கட்சிக்கு பலத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரியல் இந்து கட்சி
இந்நிலையில், கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரசின் துணைத் தலைவர் பவன் வர்மா, "மதத்தைப் பயன்படுத்தி கோவா மக்களைப் பிளவுபடுத்துவது என்பது கோவா மக்களை அவமதிக்கும் முயற்சி தான். நான் அனைவருக்கும் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதாவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான் உண்மையாக இந்து மதத்தைக் குறிக்கும் ஒரு கட்சி. அதற்கு யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
பாஜக செய்வது இது தான்
அனைவரையும் உள்ளடக்கி, சகிப்புத்தன்மை, பன்மைத்துவம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஒரே அரசியல் கட்சி உண்மையாகவே இந்து மதத்தைக் குறிக்கும் ஒரே அரசியல் கட்சி திரிணாமுல் காங்கிரஸ் தான். ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை அது இந்து மதத்தைச் சிதைக்கிறது. இந்து மதத்தை வெறுப்பைப் பரப்பவும் வன்முறையைத் தூண்டவுமே பாஜக பயன்படுத்துகிறது.
திரிணாமுல்
நமது அரசியலமைப்பு சட்டம் உறுதி அளித்ததன்படி அனைத்து மதங்களையும் அவர்களின் நம்பிக்கையையும் மதிப்பளிக்கும் ஒரே கட்சி திரிணாமுல் தான். நாங்கள் இந்து மதத்திற்காக நிற்கிறோம் என்று கூறும்போது, அது மத நல்லிணக்கம், அமைதி மற்றும் சமூக ஸ்திரத்தன்மை என அனைத்தும் உறுதி செய்யும் வகையிலேயே இருக்கும். மக்கள் பிரதிநிதிகள் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்கு உழைக்க வேண்டும் என்பதி மம்தா பானர்ஜியின் கருத்து.
மோசமான அரசியல்
அனைத்து மதத்தினரும் வாக்களித்ததால் தான், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 44 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாகக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் உயர்ந்தது.. நாங்கள் கொண்டு வரும் திட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாகவே இருக்கும். ஏதோ அனைத்து அரசியல் கட்சிகளும் இந்துக்களுக்கு எதிராக இருப்பதைப் போலக் கூறி, இந்து மதத்தின் மீது தனக்கு ஏகபோகம் உரிமை காட்ட பாஜக முயல்கிறது. மேலும், அவர்கள் வெறுப்பு பிரசாரத்தின் மூலம் மக்களைப் பிளவுபடுத்தும் மோசமான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று கடுமையாகச் சாடி பேசினார்.