காங். கூட்டணியே கரைசேரும்- மு.க.ஸ்டாலின் சொன்னது திரிபுராவில் நடக்குதே..3-வது அணிக்கு மூடு விழா?
டெல்லி: காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரைசேராது என சென்னையில் நேற்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியது 100க்கு 100 உண்மைதான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது திரிபுரா தேர்தல் முடிவுகள். திரிபுராவில் இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணிக்கு 3-வது இடம் கிடைக்கும் என கருத்து கணிப்புகள் கூறிய நிலையில் பாஜகவை மிரட்டும் வகையில் அதிக இடங்களைப் பெற்றுள்ளது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து பல்வேறு விவாதங்கள், யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பாஜகவை தவிர்த்து இதர எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்; அப்படி செய்தால் பாஜக 3-வது முறையாக ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியும் என்பது திமுக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு. மேலும் காங்கிரஸ் கட்சி தமது வியூகத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் தெலுங்கானா முதல்வர் கேசிஆர், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் காங்கிரஸை கழற்றிவிட்டு, மாநில கட்சிகளை மட்டும் ஒருங்கிணைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்குவது என செயல்பட்டு வருகின்றனர். இதில் மமதா பானர்ஜி மட்டும் காங்கிரஸை சேர்ப்பதா? இல்லையா? என்கிற இருவித குழப்பமான நிலையில் இருந்து வருகிறார்.
இந்த பின்னணியில் திரிபுராவில் எதிரும் புதிருமாக அரசியல் செய்து வந்த இடதுசாரிகளும் காங்கிரஸும் இணைந்து பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொண்டன. திரிபுராவில் இடதுசாரிகள் ஆளும் கட்சியாக, காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தன. ஆனால் பாஜக உள்ளே நுழைந்து ஆட்சியைப் பிடித்ததால் இப்போது எலியும் பூனையுமாக இருந்த இடதுசாரிகளும் காங்கிரஸும் கை கோர்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் திரிபுராவில் இந்த கூட்டணி பெறும் இடங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.

இந்நிலையில் சென்னையில் நேற்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது என பட்டவர்த்தனமாக பேசினார். மேலும் பாஜகவை 2024 தேர்தலில் வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து - விட்டுக் கொடுத்து - பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதே நேரத்தில் சிலரால் காங்கிரசு அல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது.தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் - என்று சொல்வதும் நடைமுறைக்கு சரியாக வராது என வெளிப்படையாகவே பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
தற்போது திரிபுரா தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. திரிபுராவில் இடதுசாரிகள், காங்கிரஸ் இணைந்த கூட்டணியானது கணிசமான இடங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியது போல, காங்கிரஸுடனான கூட்டணிதான் கரை சேரும் என்பதை நிரூபிக்கும் வகையில் திரிபுரா தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. ஆகையால் இதே பார்முலா அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் சொல்வதைப் போல பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையில் ஓரணியில் திரள்வதும் 3-வது அணி சிந்தனைக்கு மூடு விழா காண்பதும்தான் சரியானதாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications