''கொரோனா வைரஸும் ஓர் உயிரினம்தானே.. அதை வாழ விடுங்கள்'' .. சொல்வது பா.ஜ.க முன்னாள் முதல்வர்!
டெல்லி: கொரோனா நம்மை போன்ற ஒரு உயிர்தான். அதனை வாழ விட வேண்டும் என்று உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் பாஜகவை சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாடாய்படுத்தி வருகிறது. தினம், தினம் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் 33,000-ஐ கடந்த கொரோனா.. இன்று 303 பேர் உயிரிழப்பு.. கோவையில் பாதிப்பு அதிகரிப்பு!
கொரோனவை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று மத்திய அரசும், மாநில அரசுகளும், மக்களும் போராடி வருகின்றனர்.
கொரோனா ஓர் உயிரினம்
இப்படிபட்ட சூழ்நிலையில் கொரோனா நம்மை போன்ற ஒரு உயிர்தான். அதனை வாழ விட வேண்டும் என்று உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் பாஜகவை சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த திரிவேந்திர சிங் ராவத் கூறியதாவது:- ஒரு தத்துவ ரீதியில் பார்த்தால் கொரோனா வைரஸ் நம்மை போன்ற ஒரு உயிரினமாகும்.
வைரஸ் வாழ வேண்டும்
நம்மை போலவே அதற்கும் வாழ்வதற்கான அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் நாம் மிகவும் புத்திசாலிகள் என்று நினைத்துக்கொண்டு, அதை அழிக்க முயற்சிக்கிறோம். ஆனால் வைரஸ் புத்திசாலித்தனமாக தொடர்ந்து தன்னை உருமாற்றிக் கொள்கிறது என்று கூறினார். இந்த கருத்தால் நெட்டிசன்கள் திரிவேந்திர சிங் ராவத்தை வறுத்து எடுத்து வருகின்றனர்.
முட்டாள்தனமான கருத்து
''கொரோனா வைரஸ் உயிரினத்திற்கு மத்திய விஸ்டாவில் தங்குமிடம் கொடுக்கப்பட வேண்டும்" என்று நெட்டின்கள் கிண்டலாக கூறி வருகின்றனர். உத்தரகாண்ட் மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் திரிவேந்திர சிங் ராவத்தின் கருத்தை முட்டாள்தனமானது என கடுமையாக விளாசி வருகின்றனர்.
யார் இவர்?
உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்து வந்தவர்தான் இந்த திரிவேந்திர சிங் ராவத். அந்த மாநில பா.ஜ.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அண்மையில் முதல்வர் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். ஆனாலும் பா.ஜ.க.வில் தொடர்ந்து இருந்து வரும் அவர் மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.