காப்பீட்டுத் துறையில் நேரடி அன்னிய முதலீடு 49%-ல் இருந்து 74% ஆக அதிகரிப்பு
டெல்லி: காப்ப்பீட்டுத் துறையில் நேரடி அன்னிய முதலீடு 49%-ல் இருந்து 74% ஆக அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார்.
லோக்சபாவில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வெளியிட்ட அறிவிப்புகள்:
சிறிய நிறுவனங்கள் பயன் பெறும் வகையில் நிறுவனங்கள் சட்டம் - 2013-ல் திருத்தங்கள் கொண்டுவரப்படும். உரிய பாதுகாப்பு விதிகளுடன் காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு 49%-ல் இருந்து 74% ஆக அதிகரிக்க அனுமதிக்கப்படும்.
முதலீட்டு நிதிநிலையில் கடந்த ஆண்டு பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் 34.5% உயர்ந்துள்ளது. அரசுக்கு வருவாய் தராத சொத்துகளை கண்டறிந்து வருவாய்க்கு உரியதாக மாற்ற தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விலக்கும் திட்டங்கள் விரைவாக மேற்கொள்ளப்படும். இதன் மூலம் ரூ1.70 லட்சம் கோடி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி நிறுவனத்தில் ஆரம்ப பங்கு வெளியீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும் 2 பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார் மயமாக்கப்பட உள்ளது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.