வெடிக்கும் ஹிஜாப் விவகாரம்: பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை..மெகா அஸ்திரத்தை கையிலெடுக்கும் பாஜக!
டெல்லி : ஹிஜாப் சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில் பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை எனவும், அனைத்து சமூகத்தினருக்கும் பொருந்தக்கூடிய ஒரு சட்டம் நாட்டுக்கு தேவை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள உடுப்பி, சிவமோகா, சிக்மக்ளூர், மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர திடீர் எதிர்ப்பு கிளம்பியது.
பிரச்சாரத்தில் காலியாக கிடந்த நாற்காலிகள்! ஓ.பி.எஸ். கடும் அப்செட்! அனல் பறக்கும் தேர்தல் களம்!
இந்த நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்வி நிறுவனங்களுக்குள் முஸ்லீம் மாணவிகள் வந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என கூறி இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் உரிமைகளுக்காக முஸ்லீம் மாணவிகள் பள்ளி வாயிலில் அமர்ந்து போராடினர்.
ஹிஜாப் விவகாரம்
கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த மாதம் இதுவரை சந்தித்திராத ஒரு புதிய பிரச்சனை உருவானது. அங்குள்ள அரசு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த போது வகுப்பில் அமர கூடாது என கல்லூரி நிர்வாகம் கூறியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்வா மாணவ-மாணவியர்களை சிலர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கினர்.
3 நாட்கள் விடுமுறை
இதனால் சில இடங்களில் விவகாரம் பூதகரமாகியுள்ளது. சில இடங்களில் மோதல், கல்வீச்சு, தடியடி போன்ற சம்பவங்களும் நடைபெற்றது. நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த கர்நாடக மாநில அரசு கல்வி நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. ஆனாலும் விவகாரம் தற்போது முடிவடையாது போல... எரிகிற தீயின் எண்ணெய் ஊற்றும் பேச்சுகளால் ஹிஜாப் விவகாரம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பாஜக மாநில அமைச்சர்களும், சில அமைப்புகளும் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பொது சிவில் சட்டம் வேண்டும்
கர்நாடகாவில் ஹிஜாப் தடை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஒரே மாதிரியான சிவில் சட்டம் காலத்தின் தேவை என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் கூறியுள்ளார். அனைத்து சமூகத்தினருக்கும் பொருந்தக்கூடிய ஒரு சட்டம் நாட்டுக்கு தேவை என்று அவர் கூறியுள்ளார். "சீரான சிவில் சட்டம் காலத்தின் தேவை. நாடு ஒன்று, எனவே அனைவருக்கும் ஒரே சட்டம்" என்றும் அவர் கூறினார். ஒரே மாதிரியான சிவில் கோட் என்பது வெவ்வேறு நம்பிக்கைகளை உடையவர்களுக்கு வெவ்வேறு தனிப்பட்ட சட்டங்களை அனுமதிப்பதற்குப் பதிலாக, திருமணம், விவாகரத்து, வாரிசு மற்றும் தத்தெடுப்பு போன்ற தனிப்பட்ட விஷயங்களை நிர்வகிக்கும் பொதுவான சட்டங்களின் தொகுப்பாகும். சமத்துவத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றார்.
வலியுறுத்தும் பாஜக
பா.ஜ., அரசு, பார்லிமென்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி வருகிறது. 2019 லோக் சபா தேர்தலுக்கான பாஜகவின் அறிக்கையிலும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இடம் பெற்றிருந்தது. அரசியலமைப்பின் 14வது பிரிவு சட்டத்தின் முன் சமத்துவத்தை வழங்குவது பற்றி பேசுகிறது என்று கட்சி வாதிடுகிறது. "எந்தவொரு நபருக்கும் சட்டத்தின் முன் சமத்துவம் அல்லது இந்திய எல்லைக்குள் சட்டங்களின் சமமான பாதுகாப்பை அரசு மறுக்கக்கூடாது." எனவும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.