உ.பி. சட்டசபை தேர்தல்: பிரசார கமிட்டி, வியூகம் வகுப்பு குழு... அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட காங்.
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு குழுக்களை அதிரடியாக அறிவித்துள்ளது. அத்துடன் உ.பி. மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு 3 புதிய துணைத் தலைவர்கள், 12 பொதுச்செயலாளர்கள், 31 செயலாளர்களையும் நியமித்துள்ளது.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டு பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவை தீவிரமாக களப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
பாஜக அரசுக்கு எதிரான சமூக வாக்குகளை அறுவடை செய்வதில் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் தீவிரம் காட்டுகின்றனர். இதனை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவும் வியூகம் வகுத்து செயல்படுகிறது.
பாஜக மத்திய அமைச்சர்களை தேர்தல் பணிகளில் இறக்கியிருக்கிறது. இருந்தபோதும் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரம் உ.பி.யில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் படுகொலை விவகாரத்தைத் தொடர்ந்து பாஜகவின் வெற்றி வாய்ப்பில் சற்று பின்னடடைவு ஏற்படலாம் என்கின்றன கருத்து கணிப்பு முடிவுகள். இருந்த போதும் இதனை சரி செய்வதில் பாஜக படுமும்முரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் உ.பி. தேர்தல் களத்தில் காங்கிரஸும் அதிரடியாக தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக உ.பி. மாநில காங்கிரஸ் கமிட்டி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புதியதாக 3 துணைத் தலைவர்கள், 12 பொதுச்செயலாளர்கள், 31 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர், பொருளாளர், 8 துணைத் தலைவர்களுடன் 131 நிர்வாகிகளைக் கொண்டதாக உருமாறி உள்ளது காங்கிரஸ். உ.பி. காங்கிரஸில் மொத்தம் 34 பொதுச்செயலாளர்கள், 86 செயலாளர்கள் உள்ளனர்.
8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!
முன்னாள் எம்.பி.யான தலித் சமூகத்தைச் சேர்ந்த பி.எல். புனியா தலைமையில் 20 பேர் கொண்ட தேர்தல் பிரசார கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. மற்றொரு முன்னாள் எம்.பி. யான வாரணாசி ராஜேஷ் மிஸ்ரா தலைமையில் 15 பேர் கொண்ட தேர்தல் திட்டமிட்டலுக்கான குழுவையும் காங்கிரஸ் அமைத்துள்ளது. அயோத்தி முன்னாள் எம்.பி.யும் முன்னாள் மாநில தலைவரும் நிர்மல் கத்ரி, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். உ.பி. தேர்தல் களத்தில் பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் காங்கிரஸ் மேலிடமானது, உ.பி.யில் பெரிய அளவு சாதிக்கப் போவது இல்லை என்றாலும் சற்றேனும் கட்சியை உயிர்ப்பிக்க முடியுமா என்கிற போராட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.