15 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஜனவரி 1ம் தேதி முதல் Cowin தளத்தில் முன்பதிவு
சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் கோவின் இணைய தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி: 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் Cowin இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் கார்டு இல்லாதவர்கள் 10ஆம் வகுப்பு பள்ளி ஐடி கார்டு பயன்படுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடுமுழுவதும் வரும் ஜனவரி 3ஆம்தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

அதேபோல டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் சனிக்கிழமையன்று மோடி அறிவித்தார்.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணிக்கான முன் ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி 3ஆம் தேதியே சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. போரூரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என மாநில மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினமே மாநிலம் முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு விரைவாகவே தடுப்பூசி போட்டு முடிக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அனைத்து பள்ளிகளிலும் மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
பள்ளிகளை பொறுத்தவரையில் அவர்கள் படிக்கும் வகுப்பை வைத்தே வயது முடிவு செய்யப்பட்டுவிடும். அதில் பிரச்சினை இல்லை. மற்ற படி தடுப்பூசி போடுவதற்கு ஆதார் அடையாள அட்டை கேட்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு செலுத்தியதும், பொது இடங்களிலும் சிறார்களுக்கான தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
இதனிடையே 15-18 வயதான சிறார்கள் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஜனவரி 1 முதல் முன்பதிவு தொடங்குகிறது. 15- 18 வயதான சிறார்கள் கோவாக்சின் தடுப்பூசி போட COWIN இணைய தளத்தில் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லாதவர்கள் 10-ம் வகுப்பு ஜ.டி.கார்டை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications