எருமை, பசு மாடு மோதிய பரபரப்பு அடங்கும் முன் அடுத்த சம்பவம்.. நடுவழியில் 'ஜாம்' ஆன வந்தே பாரத் ரயில்
டெல்லி: மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை சமீபத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஆனால், இவ்வாறு அர்ப்பணிக்கப்பட்ட சில தினங்களிலேயே இந்த ரயில்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளன. இரு தினங்களுக்கு முன்னர் தண்டவாளத்தில் குறுக்கே வந்த எருமைகள் மீது ரயில் மோதியது.
தற்போது இந்த ரயிலின் சக்கரம் ஒன்று 'ஜாம்' ஆன காரணத்தினால் பயணிகள் சதாப்தி ரயிலில் மாற்றியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதே டெய்லர்.. அதே வாடகை.! நேற்று எருமைகள்.. இன்று பசு மாடுகள்.. விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்
சிறப்பம்சம்
ஒரு வாரத்திற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் அதிவேகமான ரயிலை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'வந்தே பாரத்' என்று அழைக்கப்பட்ட இந்த ரயில், மணிக்கு சுமார் 180 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. மட்டுமல்லாது, 0லிருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 52 நொடிகளில் இந்த ரயில் எட்டிவிடும். ஜப்பானின் புல்லட் ரயில் இந்த வேகத்தை எட்ட 55 நொடிகளை எடுத்துக்கொள்ளும்.
எருமை மாடுகள்
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ரயில் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சில தினங்களிலேயே பல இன்னல்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த ரயில், பாட்வா - மணிநகர் இடையே சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்தில் குறுக்கிட்ட எருமை மாடுகள் மீது சரமாரியாக மோதியது. இதில் மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மிகவும் தனித்துவம் வாய்ந்த தயாரிப்பாக கருதப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலின் முன்பாகம் அதே இடத்தில் கழன்று விழுந்தது.
பசு மாடுகள்
ரயிலின் முன்பாகம் கழன்று விழுந்தது குறித்து நெட்டிசன்கள் பலர் ரயில் உற்பத்தி குறித்து கடுமையாக விமர்சித்தனர். எதிர்க்கட்சிகளும் இதே விமர்சனத்தை முன்வைத்தது. இந்த சம்பவத்தையடுத்து எருமை மாடுகளின் அடையாளம் தெரியாத உரிமையாளர் மீது ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விபத்தையடுத்து ரயிலின் முன் பாகம் அன்றே சரி செய்யப்பட்டது. இதில் ரயில் என்ஜினுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று ரயில்வே துறை தெரிவித்திருந்தது.
கோளாறு
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு சம்பவம் அரங்கேறியது. அதாவது, காந்திநகர்-மும்பை இடையே நேற்று இந்த ரயில் இயக்கப்பட்டபோது குறுக்கே பசு மாடு வந்த நிலையில் இதேபோல ரயிலின் முன்பாகம் சேதமடைந்தது. இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்கள் விபத்துக்களாக நிகழ்ந்து வரும் நிலையில், மூன்றாவது நாளான இன்று ரயில் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ரயில் பாதியிலேயே நின்றுள்ளது.
சதாப்தி
இன்று காலை டெல்லியிலிருந்து - வாரணாசி நோக்கி சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் சக்கரம் ஒன்று 'ஜாம்' ஆனதன் காரணமாக 'வயர்' ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் காலை 7.30 மணிக்கு நடந்துள்ளது. உடனடியாக ரயிலை பரிசோதித்த ஊழியர்கள் அங்கிருந்து ரயில் மெதுவாக நகர்த்தி குர்ஜா ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அங்கு சதாப்தி விரைவு ரயில் கொண்டுவரப்பட்டு பயணிகள் அந்த ரயிலில் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
சக்கரத்தில் பிரச்னை
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வடக்கு மத்திய ரயில்வே நிர்வாகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி சிவம் சர்மா, "22436 என்ற வண்டி எண் கொண்ட வந்தே பாரத் டெல்லியிலிருந்து-வாரணாசி நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் ரயிலின் C8 பெட்டிக்கு கீழ் இருக்கும் சக்கரத்தில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு மெதுவான வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வேறு ரயிலுக்கு மாற்றப்பட்டனர்" என்று கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ரயில் சேவை தொடர்ந்து பிரச்னையில் சிக்கி வருவதால் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுத்து தற்போது விமர்சனம் செய்து வருகின்றனர்.