குடியரசுத் தலைவர் தேர்தல் நிறைவு.. டெல்லி செல்லும் வாக்குப்பெட்டிகள்.. முடிவுகள் எப்போது?
டெல்லி: நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த வாக்குகள் வரும் 21ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் நிறைவடைந்துள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். அதேபோல் தமிழ்நாட்டில் முதல் நபராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

வேட்பாளர்கள் யார்?
இந்த தேர்தலில் பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகத் திரெளபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டனர். இதில் என்டிஏ கூட்டணிக் கட்சிகள் தவிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் திரெளபதி முர்முவிற்கு ஆதரவளித்துள்ளன. இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்முவின் வெற்றி கிட்டதட்ட உறுதி என்றே கூறப்படுகிறது.

டெல்லியில் வாக்களிப்பு
ஒருபுறம் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மறுபுறம் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக டெல்லி சென்ற தமிழக எம்பி-க்கள், மக்களவை செயலகத்தில் வாக்களித்தனர். அதேபோல் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். அவரைத்தொடர்ந்து ஏராளமான பாஜக எம்பி-க்கள் வாக்குகளை செலுத்தினர். பின்னர் எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் வாக்குகளை செலுத்தினர்.

தமிழ்நாடு வாக்குப்பதிவு
தமிழக சட்டசபை வளாகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தமிழக தேர்தல் பார்வையாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த புவனேஸ்வர்குமார் நியமிக்கப்பட்டார். காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக தனது வாக்கினை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து அதிமுக, பாமக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 234 எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனர்.

வாக்குச்சீட்டு முறை
இந்தத் தேர்தலில், எம்பி-க்களுக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும், எம்எல்ஏ-க்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு எம்எல்ஏ மற்றும் எம்பி-யின் வாக்கின் மதிப்பைக் கண்டறிய தனித்தனி வண்ணங்கள் தேர்தல் அதிகாரிக்கு உதவுகின்றன. வாக்களிப்பதில் ரகசியம் காக்க, தேர்தல் ஆணையம், குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சீட்டைக் குறிக்கும் வகையில், வயலட் மையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பேனாவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

முடிவு எப்போது?
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக விமானம் மூலம் டெல்லி அனுப்பும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து வரும் 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெறுவோர் குடியரசுத் தலைவராக 26ம் தேதி பொறுப்பேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications