மன்மோகன் பொருளாதார திட்டங்களை அரைவேக்காடு என்ற நிர்மலா சீதாராமன்.. ப சிதம்பரம் பதிலடி என்ன தெரியுமா?
டெல்லி: கடந்த 1991-ஆம் ஆண்டு காங்கிரசால் கொண்டு வரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் என்பது அரைவேக்காடுத்தனமானது என்று நிர்மலா சீதாராமன் கூறியதற்கு பதிலளித்து முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் ட்விட் வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஹிந்தி மொழி பத்திரிகை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் முழுக்க ஹிந்தியில் பேசிய நிர்மலா சீதாராமன், தொடக்கத்தில், ஹிந்தியை கற்றுக்கொள்வதில் சிரமம் இருந்ததாகவும், தற்போது எனக்கு ஹிந்தி பேசும்போது நடுக்கம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் மேலும் அவர் கூறுகையில், ''இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாய், தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி ஆகியோரின் ஆட்சிகளில் இந்தியாவில் உள்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டது. இதன் காரணமாக உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா தற்போது வளர்ந்துள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பபட்ட பொருளாதார சீர்த்திருங்கள் என்பது அரைவேக்காடுத்தனமானது. இந்த கொள்கை என்பது பாஜகவின் வாஜ்பாய் பிரதமராகும் வரை எந்த முன்னேற்றமும் அடையவில்லை'' என என காங்கிரஸ் அரசை விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

ப சிதம்பரம் பதிலடி
இந்த நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்தை விமர்சித்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- கடந்த 1991-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சீர்திருத்தம் அரைவேக்காட்டுத்தனமானது என்று சொல்லியதாக தெரிகிறது. இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.. ஏனென்றால், பணமதிப்பிழப்பு, பல விகிதங்கள் கொண்ட ஜி.எஸ்.டி மற்றும் பெட்ரோல், டீசல் மீது போடப்பட்ட கொடூரமான வரிகள் போன்ற மிதமிஞ்சி சமைக்கப்பட்ட ருசியற்ற எதையும் மன்மோகன் சிங் பரிமாறவில்லை' என்று தெரிவித்திருந்தார்.

சமையல் மற்றும் பேக்கரி
மேலும் ப சிதம்பரம் வெளியிட்ட மற்றொரு ட்விட் பதிவில், 'பல்கலைக்கழகத்தில் சமையல் மற்றும் பேக்கரி தொடர்பான கோர்ஸ்களை படித்து இருக்கிறார் என தெரியப்படுத்திய நிதி அமைச்சருக்கு நாம் நன்றி தெரிவிப்போம்'' என கேலியாக பதிவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக பணவீக்கம் 7 சதவிகிதமாக உயர்ந்தது குறித்து நிர்மலா சீதாராமனை விமர்சித்து ப.சிதம்பரம் தனது ட்விட் பதிவில் சாடியிருந்தார். இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது ட்விட் பதிவில் கூறியிருந்ததாவது:-

7 சதவீதம் உயர்ந்திருக்கிறது
''உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிகவும் விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது. பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார். அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7 சதவீதம் உயர்ந்திருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications