"பிரம்மாஸ்திரம்.." கத்தாரில் 8 பேருக்கு மரண தண்டனை! அவர்களை காப்பாற்ற இந்தியாவிடம் இருக்கும் ஒரே வழி
டெல்லி: கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்க இந்தியாவுக்கு இருக்கும் ஆப்ஷன் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
கத்தாரின் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து 8 இந்தியர்கள் உளவு பார்த்ததாக புகார் எழுந்தது. கடந்தாண்டு இந்த குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த எட்டு இந்தியர்களும் இஸ்ரேலுக்கு ரகசியத் தகவல்களை அனுப்பியதாகக் குற்றம் சாட்டி கத்தார் உளவுத்துறை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர்களைக் கைது செய்தனர். அவர்கள் 8 பேருக்கும் மரண தண்டை அளித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மரண தண்டனை: இவர்கள் 8 பேரும் இந்தியக் கடற்படையில் பணியாற்றிய வீரர்கள் ஆவர். கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சௌரப் வசிஷ்ட், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் சைலர் ரேகேஷ் கோபாகுமார் ஆகிய 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் இந்தியா கத்தார் இடையேயான உறவுகளையும் பாதிக்கும் என்ற அஞ்சப்படுகிறது. இந்தியாவும் கத்தாரும் மிகச் சிறந்த வர்த்தக உறவைக் கொண்டுள்ளது. மேலும், இந்தியாவைச் சேர்ந்த பல லட்சம் பேர் கத்தாரில் சென்று வேலை செய்து வருகின்றனர். இப்படி இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான உறவு இருக்கும் நிலையில், கத்தார் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைப் பாதிக்கிறது.
இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்பு: சரி இப்போது இந்தியாவிடம் சட்ட ரீதியாக என்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம். இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறியுள்ள இந்தியா, கத்தார் அதிகாரிகளுடன் இது தொடர்பாக விவாதிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த போது 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில் ஒன்று சிறையில் தண்டனை பெற்று இருக்கும் கைதிகளை சொந்த நாட்டிற்கு அழைத்து வரும் ஒப்பந்தமாகும்.. அதாவது இந்த ஒப்பந்தத்தின் கீழ் கத்தாரில் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள், அவர்களது சிறைத் தண்டனையின் எஞ்சிய பகுதியைச் சொந்த நாட்டில் அனுபவிக்கலாம் என்ற விதி இருக்கிறது.
இந்த விதியை பயன்படுத்தி இந்தியா இந்த நபர்களை நாடு கடத்த முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இருப்பினும், அவர்கள் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாலும் இந்த விதி பொருந்தாது என்றும் கூறப்படுகிறது. அடுத்து இந்தியாவுக்கு மற்றொரு ஆப்ஷனும் இருக்கிறது.
சர்வதேச நீதிமன்றம்: அதாவது இந்த விசாரணையில் கத்தார் உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை என இந்தியா கருதினால், சர்வதேச நீதிமன்றத்துக்கு இதை எடுத்துச் செல்ல முடியும். இந்த 8 பேர் மீது என்ன புகார் என்பது குறித்து கத்தார் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.எனவே, அதையே ஒரு காரணமாக வைத்து இந்தியாவால் இதைச் சட்ட ரீதியாகச் சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே நல்லுறவு இருப்பதால் உடனடியாக இந்தியா இதைச் சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லாது. முதலில் கத்தார் நாட்டிலேயே மேல்முறையீடு செய்யும். அதன் மூலம் தண்டனையை முதலில் நிறுத்தி வைக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடும். மேலும், இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கலாம்.
பொருளாதார உறவு: கத்தாரில் இருந்து அதிகப்படியாக இயற்கை எரிவாயுவை வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.. மேலும் கத்தாரும் இந்தியாவுடன் நீண்ட கால எல்என்ஜி ஒப்பந்தத்தைப் பெற விரும்புகிறது.. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலும் இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் என்பது பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரகத்தை உள்ளடக்கிய கவுன்சில் ஆகும்.
இவர்கள் இந்தியா உடன் நீண்ட கால ஒப்பந்தத்தைப் பெற விரும்புகிறார்கள். இதையும் பயன்படுத்தி, இந்தியா இந்த 8 பேரை விடுவிக்கும் முயற்சியை எடுக்கும். இருப்பினும், அதில் வெற்றி கிடைக்குமா என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications