குடும்ப அரசியல் என்றால் உண்மையில் என்ன தெரியுமா! நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய பிரதமர் மோடி! பரபர
டெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது காங்கிரஸை கடுமையாகச் சாடிய அவர், எது குடும்ப அரசியல் என்பது குறித்தும் பேசினார்.
கடந்த 31 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து மறுநாள் அதாவது பிப். 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் .

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வந்தது. இதில் பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
எது குடும்ப அரசியல்: இதற்கிடையே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது அவர், "ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரலாம்.. அதில் எந்தவொரு தவறும் இல்லை.. ஆனால் ஒரே குடும்பம் கட்சி நடத்துவது தான் குடும்ப அரசியல்.. ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயல்வதால் தான் காங்கிரஸை இழுத்து மூடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
ஒரு சிலரின் முக்கியத்துவத்தைக் குறைக்கக் கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கான வாய்ப்பை மறுக்கிறார்கள். நாங்கள் பேசுவது எங்கள் சோதனைகளை இல்லை.. இந்த நாடு செய்த சாதனைகளைத் தான் நாங்கள் பேசுகிறோம். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும். அமெரிக்கா, சீனாவுக்குப் பிறகு மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும்.. இதுதான் மோடியின் கியாரண்டி.
மத்திய அரசின் சாதனைகள்: வந்தே பாரத், மேக் இன் இந்தியா, புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஆகியவை இந்த நாட்டின் சாதனை.. இந்தியா மட்டுமின்றி உலக நலனிற்காகவும் இந்தியா பாடுபடுகிறது. இதை ஜி20 மாநாடு உலகம் உலக தலைவர்கள் புரிந்து கொண்டனர். மத்திய பாஜக அரசு மிகப் பெரிய குறிக்கோள்களுடன் உழைத்து வருகிறது. எனவே, நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மதத்தின் அடிப்படையில் சமுதாயத்தை எதிர்க்கட்சிகள் பிளவுபடுத்துகிறது. இதை அவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் இந்த நிலைக்குக் காங்கிரஸ் தான் முக்கிய காரணம்.. காங்கிரஸ் செயல்பாடுகளால் அக்கட்சிக்கு மட்டுமில்லை.. பிற கட்சிகளுக்கும் நாட்டுக்கும் கூட மிகப் பெரிய இழப்பு.. அரசின் அனைத்து நடவடிக்கைகளை எதிர்ப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்.
காங்கிரஸ் கட்சிக்கு முடிவுகாலம் வந்துவிட்டது. காங்கிரஸின் மந்தமான ஊர்ந்து செல்லும் ஆட்சிக்கு உலகில் யாருமே போட்டி இல்லை. பாஜக ஆட்சியில் சுமார் 4 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளது. காங்கிரஸ் போன்ற ஆட்சி இருந்து இருந்தால் நாங்கள் செய்த சாதனைகளைச் செய்ய 3 தலைமுறைகள் ஆகியிருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications