விலகாத "மர்மம்.." உள்ளூர் மக்கள் சொன்ன பகீர் தகவல்.. பண்ட் விபத்திற்கு என்ன காரணம்! தொடரும் விசாரணை
டெல்லி: நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஓட்டிச் சென்ற கார் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது. சில நாட்கள் ஆகிவிட்ட போதிலும், இன்னுமே கூட விபத்து குறித்த போலீஸ் விசாரணை தொடர்ந்து நீண்டு கொண்டே போகிறது.
இந்திய கிரிகெட் வீரர் ரிஷப் பண்ட் ஓட்டி வந்த சொகுசு கார் கடந்த வியாழக்கிழமை அதிகாலை விபத்தில் சிக்கியது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் அவருக்கு மோசமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் சுஷில் தெரிவித்திருந்தார். இந்த டிரைவர் சுஷில் தான் தக்க நேரத்தில் ரிஷப் பண்ட்டை காப்பாற்றியுள்ளார்.
ரிஷப் பண்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி.. புருவத்தில் ஏற்பட்ட வெட்டுக்காயம்.. முக்கிய நிர்வாகி தகவல்!
ரிஷப் பண்ட் விபத்து
அதிகாலையில் ரிஷப் பண்ட் காரை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சறுக்கிக் கொண்டே எதிரே இருந்த டிவைடரில் மோதியுள்ளது. அதன் பிறகு கொஞ்ச தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கார், திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. டிரைவர் சுஷில் குமார் மற்றும் அவரது பேருந்தில் பயணித்த சிலர் கார் கதவு கண்ணாடி வழியே அவரை வெளியே இழுத்துப் போட்டுள்ளனர். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
காயம்
தலை மற்றும் முதுகு பகுதியில் சிறு காயங்கள் ஏற்பட்ட போதிலும், மோசமான காயம் எதுவும் ஏற்படவில்லை. அவருக்குச் சிறு ஆப்ரேஷன்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே இந்த விபத்து குறித்த விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் பண்ட் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சிலர் கூறினர். இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுத்த போலீசார், மது குடித்திருந்தால் இத்தனை தூரம் எப்படிச் சரியாக வாகனம் ஓட்டி வந்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
என்ன காரணம்
வடமாநிலங்களில் இந்த மாதங்களில் குளிர் காலம் இருக்கும். இந்த காலகட்டத்தில் அங்குப் பனிப்பொழிவும் அதிகமாக இருக்கும். இந்தாண்டு வழக்கத்தைக் காட்டிலும் குளிர் அதிகமாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிகாலை நேரத்தில் அடர்த்தியான பனிப்பொழிவு அந்த பகுதிகளில் நிலவும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு 10 அடி தொலைவில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாது. இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாகவும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர்.
உள்ளூர் மக்கள்
ரிஷப் பண்ட்டின் கார் விபத்து நடந்த இடத்தில் ஏற்கனவே பல விபத்துகள் நடந்ததாகவும் இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றன. அந்த நெடுஞ்சாலையில் சர்வீஸ் லேன் அமைக்கப்படவில்லை. இதனால் அங்குச் சாலைகள் குறுகியதாக மாறியுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் ஈஸியாக பேலன்ஸ் இழக்கக் கூடும். இதனால் அங்கு விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அப்பகுதியில் போலீசார் நடத்திய விசாரணையிலும் இதுதான் உறுதியாகியுள்ளது.
போலீசார்
இன்னும் சிலர் சாலையில் பெரிய பள்ளம் இருந்ததாகவும் அதிவேகமாக வந்த பண்ட்டின் கார் அதில் இறக்கியதால் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்றனர். இதன் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த இடத்தில் ஏற்கனவே இதற்கு முன்பும் கூட பல விபத்துகள் நடந்துள்ளதாகவும் இதனால் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகளுக்குப் பல முறை தெரியப்படுத்திய போதிலும் அந்த இடத்தை சீரமைக்க அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
தெரியவில்லை
ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்தில் சிக்கிய இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும், இன்னுமே கூட விபத்து எதனால் ஏற்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை. வாகனம் ஓட்டும் போது பண்ட் தூங்கிவிட்டதாகவும் இதுவும் விபத்திற்குக் காரணம் என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. சாலையில் இருந்த பள்ளத்தைத் தவிர்க்க பண்ட் முயன்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக டெல்லி கிரிக்கெட் சங்க இயக்குநர் ஷியாம் ஷர்மா தெரிவித்துள்ளார். இப்படி முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வருவதால் விபத்திற்கான காரணத்தை இன்னும் போலீசாரால் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை.