மின்னல் வேகத்தில் பரவும் 3ஆம் அலை.. இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் அதே நிலைதான்.. தாண்டவமாடும் கொரோனா
டெல்லி: உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒரே நாளில் 36.32 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ்தான். சீனாவில் பரவ தொடங்கிய கொரோனாவை சமாளிக்க உலக நாடுகள் திணறி வருகிறது.
கொரோனா அலை அலையாகத் தாக்குவதே இங்கு முக்கிய பிரச்சினையாக உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது என்றால் ஆல்பா, டெல்டா கொரோனா அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தியது.

கொரோனா பாதிப்பு
இப்போது ஓமிக்ரான் கொரோனாவால் உலகின் அனைத்து நாடுகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உலகில் ஒரே நாளில் கொரோனாவால் 36.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இதுவரை வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,67,86,449ஆக அதிகரித்துள்ளது.அதேபோல ஒரே நாளில் 1,643,738 பேர் குணமடைந்துள்ளனர்.

எந்த நாடுகள்
உலகளவில் தற்போது அதிக தினசரி கேஸ்களை கொண்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 779,036 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸ் நாட்டில் 400,851 பேருக்கும் இத்தாலியால் 179,106 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல மாதங்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 3.35 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா உயிரிழப்புகள் இப்போது ஒரு சில நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் பெரும்பாலும் கட்டுக்குள் வந்துவிட்டன. உலகளவில் நேற்று ஒரே நாளில் 9,029 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 2777 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல ரஷ்யாவில் 692 பேரும் இந்தியாவில் 489 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், பிரேசில் (396), இத்தாலி (373) நாடுகளிலும் தினசரி உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

கொரோனா வேக்சின்
தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மைக் காக்கும் பேராயுதமாக பார்க்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் வேக்சின் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பூஸ்டர் டோஸ் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. தற்போதைய பாதிப்பை வைத்துப் பார்க்கும்போது கொரோனாவின் அடுத்த அலை தொடங்கியுள்ளதாக உலகின் பல ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர், ஓமிக்ரான் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும் கூட அது அதிகபட்ச கொரோனா கேஸ்களை ஏற்படுத்துவதால் மோசமான பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications