அதிதீவிர புயலாக மாறியது யாஸ்..இன்று கரையை கடக்கிறது..சென்னையில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது
டெல்லி: வங்காள விரிகுடா கடலில் உருவாகிய யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாறியது. ஒடிசா - மேற்கு வங்க கடற்கரைகளில் பாரதீப், சாகர் தீவுகளுக்கு இடையே இன்று மதியம் கரையை கடக்கிறது.
கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா கடலில் உருவாகிய யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இரவுப்படி யாஸ் புயல் 15 கி.மீ வேகத்தில் வடக்கு, வடக்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது.
ஒடிசா - மேற்கு வங்க கடற்கரைகளில் பாரதீப், சாகர் தீவுகளுக்கு இடையே இன்று மதியம் யாஸ் புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு சுமார் 165 கி.மீ. வேகத்தில் காற்றுவீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்கம், ஒடிசா மாநில கடற்கரையோரம் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து மட்டும் 9 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாஸ் புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. அங்கு கடற்படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயாராக உள்ளனர்.
இதற்கிடையே சென்னையில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்தது. யாரும் நடந்து செல்ல வேண்டாம் என்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லுமாறும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியது.