சிறார்களுக்கான தடுப்பூசி ரெடி.. ஜைடஸ் காடிலா தடுபூசிக்கு விரைவில் அனுமதி
டெல்லி: பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள ஜைடஸ் காடிலா வேக்சினுக்கு இந்த வாரத்தில் ஒப்புதல் அளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படும்பட்சத்தில் உலகிலேயே DNA தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா வேக்சின் என்ற சிறப்பை பெறும்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் ஏற்பட்ட கொரோனா 2ஆம் அலை மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் தினசரி கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்திற்குச் சென்றது.
வேக்சின் பணிகளில் மத்திய அரசு காட்டிய அலட்சியமே போனதே 2ஆம் அலை இந்தளவுக்கு மோசமான நிலைக்குச் செல்ல முக்கிய காரணம் என பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன.

அனைவருக்கும் வேக்சின்
இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்திருந்தது. அதன் பின்னரே, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வேக்சின்களில் 75% மத்திய அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு விநியோகிக்கும் என அறிவிக்கப்பட்டது. இருந்தாலும்கூட, நாட்டில் இருந்த தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வேக்சின் உற்பத்தி இல்லை. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வேக்சின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள்
இதனால், வேக்சின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு வேக்சின் உற்பத்தி இன்னும் சில வாரங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பல புதிய வேக்சின்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தவிர ஸ்புட்னிக் வி, மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய வேக்சின்களுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜைடஸ் காடிலா
இந்நிலையில், ஐந்தாவது தடுப்பூசியாக ஜைடஸ் காடிலா கொரோனா தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜைடஸ் காடிலா நிறுவனம் அவரசக்கால அனுமதி வேண்டிக் கடந்த ஜூலை 1ஆம் தேதி விண்ணப்பித்திருந்தது. மூன்றாம்கட்ட மருத்துவ சோதனையில் ஜைடஸ் காடிலா தடுப்பூசி சுமார் 66.6% வரை தடுப்பாற்றல் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் DNA வேக்சின்
கோவாக்சின், கோவிஷீல்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் 2 டோஸ்களாக அளிக்கப்படும் நிலையில், இந்த ஜைடஸ் காடிலா தடுப்பூசி 3 டோஸ்களாக அளிக்கப்பட வேண்டும். இந்த வேக்சினுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்பட்சத்தில் உலகிலேயே DNA தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா வேக்சின் என்ற சிறப்பை இது பெறும். அதேபோல மற்ற வேக்சின்கலுடன் ஒப்பிடுகையில், இந்த வேக்சின் தடுப்பாற்றல் குறைவு என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறார்களுக்கான வேக்சின்
அதேபோல 12 முதல் 18 வயதுடைய சிறார்கள் மத்தியிலும் இந்த ஜைடஸ் காடிலா நிறுவனம் வேக்சின் சோதனையை நடத்தியுள்ளது. இந்த வேக்சின் மூலம் 12 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு வேக்சின் போடும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் முதல் சிறார்களுக்கு வேக்சின் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வேக்சின் அச்சம்
இந்தியாவில் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட முதல் சில மாதங்கள் தடுப்பூசி பற்றிய அச்சம் மக்களிடையே நிலவியது. இருப்பினும், அதன் பிறகு, குறிப்பாக 2ஆம் அலைக்குப் பிறகு வேக்சின் போட்டுக் கொள்ள மக்களிடையே ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது. பல இடங்களில் வேக்சின் இல்லாததால் மக்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications