அதிமுக வேட்பாளரின் ப்ளக்ஸ் பேனர்கள் கிழிப்பு.. திடீர் பதட்டம்.. அப்பறம் நடந்தது தான் ட்விஸ்ட்டே..!
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அதிமுக வேட்பாளரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் திடீர் பரபரப்பு உருவான நிலையில், நாய்கள் கடித்து குதறியதில் தான் பிளக்ஸ் பேனர்கள் கிழிந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி திண்டுக்கல் மாநகராட்சியில் நாற்பத்தி எட்டு வருடங்களில் நாற்பது 7 வார்டுகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. ஒரு வார்டு கூட்டணிக் கட்சியான தமாக(மூப்பனார்) கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாற்பத்தி எட்டு வார்டுகளில் 33 வார்டுகளில் அதிமுக திமுக நேரடியாக பலப்பரீட்சை நடத்துகின்றன. 9 வார்டுகளில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக வேட்பாளர்கள் மோதுகின்றன.

தேர்தல் அலுவலகம்
தற்போது பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட பலரும் திண்டுக்கல் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் அலுவலகங்களை அமைத்துள்ளனர். பிரச்சார நேரம் போக மீதி நேரங்களில் அங்கு தொண்டர்களும் நிர்வாகிகளும் அமர்ந்து ஆலோசனை நடத்துவது வழக்கம். திமுக அதிமுக மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சியினரும் சுயேச்சை வேட்பாளர்களும் இதேபோல பல்வேறு பகுதிகளில் தேர்தல் அலுவலகங்களை அமைத்துள்ளனர்.

ப்ளக்ஸ் பேனர் சேதம்
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவுண்ட் ரோடு பகுதியில் 32வது வார்டு உறுப்பினர் போட்டிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வினோத் குமார் என்பவர் தேர்தல் அலுவலகம் அமைத்து இருந்தார். அலுவலகத்திற்கு அருகில் அவரது புகைப்படமும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோரது புகைப்படங்களும் இருந்த பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை தேர்தல் அலுவலகத்திற்கு நிர்வாகிகள் வந்து பார்த்தபோது பிளக்ஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டிருந்தன.

திடீர் பதற்றம்
இதையடுத்து நிர்வாகிகள் இது குறித்து வேட்பாளர் வினோத்குமாருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகள் வரத் தொடங்கியதால் திடீர் பரபரப்பு உருவானது. பல்வேறு வாட்ஸ்அப் குரூப்களில் இந்த புகைப்படம் பரப்பப்பட்ட நிலையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக பிளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக மாவட்ட காவல்துறையில் உத்தரவின் பேரில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
Recommended Video

சிசிடிவி காட்சிகள்
தொடர்ந்து அங்கு அதிமுகவினர் குவிந்து வந்த நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அதில் பிளக்ஸ் பேனர்களை மர்ம நபர்கள் யாரும் கிழிக்கவில்லை என்பது முதலில் தெரியவந்தது. அதாவது நள்ளிரவு நேரத்தில் அங்கு சுற்றித் திரிந்த தெரு நாய்கள் பிளக்ஸ் பேனரை கடித்து குதறி உள்ளன. இதன் காரணமாகவே அது சேதமடைந்துள்ள சிசிடிவி காட்சிகள் வெளியானது. தொடர்ந்து அதிமுக வேட்பாளரின் பேனர் கிழிக்கப்பட்டதாக தகவல் பரப்பப்பட்ட வாட்ஸ்அப் குரூப்களில் நாய்கள் பிளக்ஸ் பேனரை கடித்து வைத்த சிசிடிவி காட்சிகளும் அனுப்பி வைக்கப்பட்டதையடுத்தே அங்கு பதட்டம் தணிந்து உள்ளது.












Click it and Unblock the Notifications