காஞ்சிபுரத்தில் அதிசயம்.. நேரா கோயிலுக்கு வந்து "கூப்பிடுதாமே".. அர்ச்சகரும் பாலுடன் ஓடுறாரே.. ஓ காட்
சன்னிதானத்தில் அபிஷேக பாலை தினமும் குடித்து வருகிறதாம் ஒரு காகம்
திண்டுக்கல்: நம்பவே முடியாத அளவுக்கு ஆச்சரிய சம்பவம் ஒன்று காஞ்சிபுரத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. தொடர் அதிசயங்களால், பக்தர்கள் பூரித்து போயுள்ளனர்.
எத்தனையோ தருணங்களில் விலங்குகளும், பறவைகளும் மனிதர்களையே அசரடிக்கும் விதத்தில் நடந்து கொண்டுவிடுகின்றன... அந்த செயல்கள் திகைக்கவும் செய்து விடுகின்றன..
நம்ப முடியாத அளவுக்கு, சில செய்திகள் இணையத்தில் வெளிவருவதையும் காண முடிகிறது. இப்படித்தான், கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்ட செய்தி ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது..
பசுமாட்டு பால்
வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்.. 50 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் மயில்.. பெருமாள், விவசாயம் பார்த்து வருவதோடு, கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இவர் சிறுவயது முதல் ஒரு கன்றுகுட்டியை வாங்கி வளர்த்து வருகிறார்.. அந்த கன்றுக்குட்டி இப்போது வளர்ந்து, தெய்வீக தன்மையுடன் காணப்படுகிறதாம்.. மேலும், எந்நேரமும் அந்த பசுமாடு பால் தருகிறதாம்.. இத்தனைக்கும் பல மாதங்களாக எவ்வித கன்றும் ஈன்றாமல், சினை ஊசி போடாமலும், 24 மணிநேரமும் அந்த பசு பால் தந்தவண்ணம் உள்ளதாக பூரித்து கூறுகிறார்கள்.
பெருமாள் பசு
எந்தநேரம் கறந்தாலும் பால் வருவதால், அந்த பகுதி மக்களும் இந்த பசுவை ஆச்சரியத்துடன் பார்த்து, வணங்கியும் வருகிறார்கள்.. அதுமட்டுமல்ல, தங்கள் குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால், உடனே இந்த பசுமாட்டிடம் ஓடிச்செல்கிறார்கள். அந்த பசுவுக்கு புல்கட்டு, கீரை, தீவனங்களை கொடுத்து, அதன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று வருகின்றனர்... இந்த பசுவிடம், எந்த கோரிக்கை வைத்தாலும், அது உடனுக்குடன் நிறைவேறி வருவதால், தெய்வீக தன்மை கொண்ட அந்த பசுவை காண பல்வேறு ஊர்களில் இருந்து திரண்டு வந்து வழிபட்டு செல்கின்றனர்... இந்த சம்பவம் மிகவும் பரபரப்பாக கடந்த வாரம் முழுவதும் பேசப்பட்ட நிலையில், இன்னொரு சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்து திகைக்க வைக்கிறது.
27 நட்சத்திரம்
காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள ஊக்கல் பெரும்பாக்கம் கிராமத்தில், நட்சத்திர விருச்ச விநாயகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது.. இந்த கோயிலில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் விநாயகர் சன்னதிகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு, அதற்கான வழிபாடுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.. இதைதவிர, இங்கு சனீஸ்வர பகவானுக்கு தனியாகவே ஒரு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.. இந்த சன்னிதியில் தினமும், சனீஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
கா.. கா
இந்த சனீஸ்வர பகவானை தரிசிக்க, தினமும் ஒரு காக்கா வருகிறதாம்.. நேராக வந்து சுவாமியை தரிசனம் செய்து விட்டு, சன்னதி கோபுரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்கிறதாம்.. பிறகு, "கா, கா" என்று சத்தம் போட்டு, கோவில் அர்ச்சகரை கூப்பிடுகிறது.. காக்கா கூப்பிட்டதும், அந்த அர்ச்சகரும் அபிஷேக பாலை எடுத்து கொண்டு வந்து காக்காவுக்கு தருகிறார்.. காக்காவும், அந்த பாலை அருந்திவிட்டு பறந்து விடுகிறது.. சனீஸ்வரன் வாகனமாக கருதப்படும் காகத்தின் இந்த செயல், காண்போரை சிலிர்த்து வைத்து வருகிறது.
கிரில் கேட்
பொதுவாக, காக்காவுக்கு சாப்பாடு வைக்கும்போது, நாம் யாராவது அருகில் இருந்தால் பறவைகள் நெருங்கி வந்து சாப்பிடுவதில்லை.. மனித நடமாட்டம் தெரிந்தாலே, பறவைகள் சிதறி ஓடிவிடும்.. அதேபோல், கைகளில் உணவை எடுத்து நீட்டும்போதும் அதை பறவைகள் சாப்பிடுவதில்லை.. ஆனால், இந்த காக்கா வித்தியாசமாக இருக்கிறது.. அங்குள்ளவர்கள் வீடியோ எடுப்பது தெரிந்தும், அங்கேயே சன்னிதானத்தின், கிரில் கேட் மீது உட்கார்ந்தபடியே உள்ளது.. ஒரு அகல் விளக்கில் அபிஷேக பாலை ஊற்றி அர்ச்சகர் நீட்டவும், அதை அவரது கையாலேயே குடிக்கிறது. இப்படி தினமும் நடக்கிறதாம்.. இந்த வீடியோவை "ஆ வென" பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர் இணையவாசிகள்..!!!