இன்ஸ்டாவில் மலர்ந்த காதல்.. மருமகனின் கதையை முடித்த மாமனார்! எல்லாம் சாதி வெறி.. திண்டுக்கல் திடுக்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கூட்டாத்து அய்யம்பாளையம் அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து சாதி மாறி திருமணம் செய்த மருமகனை வெட்டி படுகொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்ட நிலையில், மகளின் போராட்டம் எதிரொலியாக அவரது தாய் மற்றும் உடன்பிறந்த அண்ணனையும் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டை அடுத்த, விராலிப்பட்டி அருகே, இராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். பால் கறக்கும் தொழிலாளியான, இவர் வீடு அருகே கணபதிபட்டி கிராமத்தில் வசித்து வரும் சந்திரன், மகள் ஆர்த்தி என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாதிமாறி திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், ராமச்சந்திரன், ஆர்த்தி ஆகிய இருவரும் இரு வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வழக்கம்போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பகுதிக்கு பால் கறக்கும் வேலைக்கு மருமகன் ராமச்சந்திரன் சென்றுள்ளார்.

இன்ஸ்டாகிராம் காதல்
அப்போது, நிலக்கோட்டை அருகே கூட்டாத்து அய்யம்பாளையம் பாலத்தில் சென்ற போது, அவரை வழிமறித்த மாமனார் சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து மருமகன் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மருமகன், ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நிலக்கோட்டை காவல்துறையினர், ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆர்த்தி போராட்டம்
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நிலக்கோட்டை காவல்துறையினர், ராமச்சந்திரன், கௌரவ கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் மருமகனை கொலை செய்த மாமனார் சந்திரனை கைது செய்தனர். இந்நிலையில், மாமனார் சந்திரன் ஒருவரால் மட்டும் ராமச்சந்திரன் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்க முடியாது? இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம்? எனவே, உண்மை கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறி, கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாமியார் கைது
மேலும், இராமநாயக்கன்பட்டியில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, அவரது உடலை பெற்று அடக்கம் செய்தனர். ராமச்சந்திரன் மனைவி ஆர்த்தி போராட்டம் எதிரொலியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், காவல் ஆய்வாளர் சத்தியபிரபா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
மைத்துனர் கைது
இந்நிலையில் ராமச்சந்திரனை கொலை செய்த வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த சந்திரன் என்பவரது மனைவி அன்புச்செல்வி (39) அவர்களது மகன் ரிவின் (23) ஆகியோரை, நிலக்கோட்டை தனி படை காவல்துறையினர் கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நிலக்கோட்டை அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து காதல் திருமணம் செய்த, மருமகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாமனாரை தொடர்ந்து மாமியார்,மைத்துனர் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications