தென் ஆப்பிரிக்காவையே ஆட்டம் காண செய்த.. குப்தா சகோதரர்கள் ஐக்கிய அமீரகத்தில் கைது
துபாய்: தென் ஆப்பிரிக்காவில் ஊழல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட குப்தா சகோதரர்கள், தென் ஆப்பிரிக்காவில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு தப்பிய நிலையில், அவர்கள் இப்போது ஐக்கிய அமீரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் ஆப்ரிக்காவில் ஒரு கட்டத்தில் மிக முக்கிய தொழிலதிபர்களாக இருந்தவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்களான குப்தா சகோதரர்கள்! இவர்கள் தென் ஆப்பிரிக்காவில் வெற்றிகரமான தொழிலதிபர்களாக இருந்தனர்.
அதூல் மற்றும் ராஜேஷ் குப்தா சகோதரர்கள் தான் குப்தா சகோதரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பெரும் புகழுடன் இருந்த இவர்கள், ஒருகட்டத்தில் மிகப் பெரிய ஊழல் புகார்களில் சிக்கத் தொடங்கினர்.

தென் ஆப்ரிக்கா
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் சூமாவுடன் குப்தா சகோதரர்கள் மிகவும் நெருக்கமான ஒரு தொடர்பை வைத்து இருந்தனர். அதிபர் உடன் இருந்த தொடர்பைத் தவறாகப் பயன்படுத்திய குப்தா சகோதரர்கள், இதன் மூலம் அதிக லாவம் தரும் ஒப்பந்தங்கள் தங்கள் நிறுவனத்திற்கே கிடைக்கும்படி பார்த்துக் கொண்டனர். மேலும், அதிகாரமாக்க அரசு பதவிகளில் கூட தங்கள் விரும்பிய நபர்கள் நியமிக்கப்படுவதை உறுதி செய்தனர்.

கைது
இந்த ஊழல் புகார்கள் வெளியே வந்த உடன் தீவிரா விசாரணையை அந்நாட்டு போலீசார் தொடங்கினர். இருப்பினும், அவர்கள் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறினர். இந்தச் சூழலில் தான் அவர்கள் இருவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தென் ஆப்ரிக்கா அரசு தெரிவித்துள்ளது. மேலும், அவர்களைத் தென் ஆப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்லும் முயற்சிகளும் தொடங்கப்பட்டு உள்ளது.

விசாரணை
இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து இந்த விசாரணை அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அதிபருடன் இருந்த தொடர்பைப் பயன்படுத்தி போக்குவரத்து, மின்சாரம் மற்றும் ஆயுத நிறுவனங்களில் முறைகேடான வழிகளில் பணப்பலன்களைப் பெற்றதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு ஆகும். ஜூமாவின் ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியில் குறைந்தது 500 பில்லியன் ரேண்ட் ($32 பில்லியன் டாலர்) கைடால் செய்யப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

உலக நாடுகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தென்னாப்பிரிக்காவுடன் கைதிகளைப் பரிமாற்றம் செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த கைதுகள் நடந்துள்ளன. இருப்பினும், தென் ஆப்பிரிக்க அரசு இதில் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வந்தது. இப்போது இருக்கும் தென்னாப்பிரிக்க அரசு கடந்த 2018இல் குப்தா சகோதரர்களை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா விசா தடை தொடங்கி சொத்து முடக்கம் வரை பல நடவடிக்கைகளை எடுத்தது.

மறுப்பு
அதேபோல பிரிட்டனும் கடந்த ஆண்டு விசா தடை விதித்தது. அதேபோல இன்டர்போல் நிறுவனமும் கடந்த பிப்ரவரியில் இரண்டு சகோதரர்களையும் அதன் மோஸ்ட் வாண்டட் பட்டியலில் சேர்த்தது. கடந்த டிசம்பர் 2015இல், அப்போதைய நிதியமைச்சர் நிநி( Nhlanhla Nene)என்பவரை அப்பதவியில் இருந்து நீக்கி அவருக்குப் பதிலாக அதிகம் டெஸ் வான் ரூயனை நிதியமைச்சர் ஆக்கியதிலும் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை குப்தா சகோரதர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications