ராணுவ தளபதி முதல் மரண தண்டனை வரை.. காலமானார் பாக். முன்னாள் அதிபர்.. யார் இந்த பர்வேஸ் முஷாரப்?
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்.
துபாய்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். துபாயில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்து உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதலே முஷாரப் துபாயில் வசித்து வரும் முஷாரப், 1999- ஆம் ஆண்டு ராணுவ தளபதியாக இருந்து ஆட்சியை கைப்பற்றியவர்.
1943ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி டெல்லியில் வசித்து வந்த சையத் முஷ்ஃபராஃபிதீன் - பேகன் ஷரீன் தம்பதிக்கு பிறந்தவர். இவரது குடும்பம், 1947ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானிற்கு குடிபெயர்ந்தது. இதனைத் தொடர்ந்து இளைஞராக இருந்த போது பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார். பின், பாகிஸ்தான் ராணுவ பீரங்கிப்படை கமாண்டராக பதவி உயர்வு அடைந்தார். 1990ம் ஆண்டு ராணுவ தளபதியானார். துணை ராணுவச் செயலர், ராணுவ இயக்குநர் ஜெனரல் என பல உயர் பதவிகளை வகித்திருக்கிறார்.
அதிபரான முஷாரப்
1999ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் அதிபராக இருந்தபோது, முஷாரப்புக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கினார். இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் முஷாரப்பை தலைமை தாங்க வைத்தார் நவாஸ். கார்கில் போரில் பாகிஸ்தான் படை தோற்றதால் நவாஸ் ஷெரீஃப் - பர்வேஸ் முஷாரப் இடையே முரண்பாடுகள் வலுத்தன. முஷாரப் ராணுவத்தில் கிளர்ச்சியைத் தூண்டி அதிபராக இருந்த ஷெரீஃபை சிறையில் தள்ளிவிட்டு, தன்னை பாகிஸ்தானின் அதிபராக அறிவித்துக்கொண்டார்.
பாகிஸ்தான் தாலிபன்
பாகிஸ்தான் அதிபரான பின் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மஸ்ஜித் மீது முஷாரப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்தனர். அந்த பள்ளிவாசலின் மதகுருக்கள் ஷரியா சட்டத்தை பாகிஸ்தான் தலைநகரில் அமல் செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் 'பாகிஸ்தான் தாலிபன்' உருவாகக் காரணமானது. இதன்பின் அந்நாட்டில் ஏராளமான குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. வரலாற்றில் அந்நாட்கள் ரத்தம் தேய்ந்த நாட்களாக பார்க்கப்படுகிறது.
சர்வாதிகார ஆட்சி
இதனைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு நவ.3ம் தேதி அரசியல் சாசனத்தை முடக்கி பாகிஸ்தானில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கினார். இஸ்லாமாபாத்தில் ராணுவம் உச்சநீதிமன்றத்தில் புகுந்து நீதிபதிகளைக் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தது. அனைத்து ஊடக அலுவலகங்களிலும் ராணுவக் கண்காணிப்பு போடப்பட்டது. சுதந்திரமாக செயல்பட்டுவந்த ஊடங்கள் நின்றுபோயின. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் முஷாரப்புக்கு எதிராக போராடத் தொடங்கினர். கிட்டத்தட்ட சர்வாதிகாரியை போல் ஆட்சியை நடத்தினார்.
முஷாரப் தோல்வி
2008ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நடைபெற்ற முஷாரப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் வென்றது. பின்னர், 2008 ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் மக்கள் கட்சி பாகிஸ்தான் முஸ்லிம் லீக் உடன் இணைந்து முஷாரப்பை பதவி விலக வற்புறுத்தின. இதனால், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி அதிபர் பதவியை ராஜினாமா செய்த முஷாரப் உடனே லண்டன் சென்றுவிட்டார்.
முஷாரப் கைது
2013ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது மீண்டும் போட்டியிட பாகிஸ்தான் வந்தார். அப்போது 2007ம் ஆண்டு கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷாரப்பை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அவர் தேர்தலில் போட்டியிடவும் மறுக்கப்பட்டது. பாகிஸ்தானிலிருந்து வெளியேற முடியாதபடி தடை போடப்பட்டது.
மரண தண்டனை
பின்னர் 2016ம் ஆண்டு உடல்நிலைக் காரணம் காட்டி மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் 2017ம் ஆண்டு ராவல்பிண்டி நீதிமன்றம் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளி என்று முஷாரப்பை அறிவித்தது. தொடர்ந்து இந்த வழக்கில் பர்வேஸ் முஷாரப்பிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது துபாயில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் துபாயில் உடல்நலக்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.