இனவெறி.. மன்னிப்பு கேட்ட குயின்டன் டி காக்! முழங்காலிட சம்மதம்.. எங்க சித்தி கறுப்பினம் என விளக்கம்
துபாய்: கறுப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழங்காலிட மறுத்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குயின்டன் டி காக்.
Recommended Video
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட், வெள்ளை நிற காவல் அதிகாரியால் கழுத்தில் காலால் அழுத்தி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் போராட்டங்களுக்கு காரணமாக மாறி அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் கறுப்பினத்தவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை சந்திக்க நேரிட்டது.
இந்த நிலையில்தான், கறுப்பினத்தவர்கள் உயிர்வாழ்வதும் முக்கியம்தான் என்று பொருள் படும் வகையில், 'Black Lives Matter' என்ற இயக்கம் அமெரிக்கா மட்டுமின்றி, உலகமெங்கும் கையிலெடுக்க ஆரம்பிக்கப்பட்டது.

முழங்காலிட்டு ஆதரவு
20 ஓவர்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும், 'Black Lives Matter' பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு போட்டி தொடங்கும் முன்பாக வீரர்கள் முழங்காலிட்டு நெஞ்சில் கை வைத்து நிற வெறிக்கு எதிராக உறுதியேற்கிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போதும், இவ்வாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

குயின்டன் டி காக் மறுப்பு
அதேநேரம், தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குவின்டன் இப்படி முழங்காலிட முடியாது என்று கூறிவிட்டார். மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் டி காக் களமிறங்கவில்லை. குயின்டன் டி காக் இன வெறியோடு நடந்து கொண்டாரா என்ற கேள்விகளை இந்த சம்பவம் ரசிகர்களிடையே எழுப்பியது.

தென் ஆப்பிரிக்கா
இந்த நிலையில், குயின்டன் டி காக் ஒரு விளக்கம் அளித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதை ஷேர் செய்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தென்னாப்பிரிக்க போட்டியில் நான் ஆடாததற்கு காரணம் அவர்களை அவமதிப்பதோ, அல்லது, வேறு யாரையும் அவமரியாதை செய்யவோ இல்லை.

மன்னிப்பு
எனது சக வீரர்களிடமும், ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனவாதத்திற்கு எதிராக நிற்பதன் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்கிறேன். வீரர்களாகிய எங்களின் பொறுப்பை நான் புரிந்துகொள்கிறேன். வீரர்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

முழங்காலிட தயார்
இனவெறிக்கு எதிரான செய்தியைப் பரப்பவும், மற்றவர்களின் வாழ்க்கையை சிறப்பாக்கவும் உதவினால், தான் முழங்காலிட்டு உறுதியேற்க தயார். நான் முழங்காலிடுவது மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது என்றால், நான் அவ்வாறு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கலப்பின குடும்பம்
தான் ஒரு கலப்பு இன குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. எனது ஒன்றுவிட்ட சகோதரிகள் வெள்ளை நிறமுள்ளவர்கள், எனது தந்தையின் மனைவி (வளர்ப்பு தாய்) கறுப்பினத்தைச் சேர்ந்தவர். என்னைப் பொறுத்தவரை, நான் பிறந்ததிலிருந்து கறுப்பினத்தவர்கள் உயிர்வாழ்வது முக்கியம்தான். ஒரு சர்வதேச இயக்கம் அதை எனக்கு கற்பிக்க வேண்டும் என்று கிடையாது.

தனி நபர் உரிமையை விட மக்கள் உரிமை முக்கியம்
அனைத்து மக்களின் உரிமைகளும் சமத்துவமும் எந்தவொரு தனிநபரை விடவும் முக்கியமானது. நம் அனைவருக்கும் உரிமைகள் உள்ளன, அவை முக்கியமானவை என்பதைப் புரிந்துகொண்டே, நான் வளர்க்கப்பட்டேன். இவ்வாறு குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார். அணி கட்டாயப்படுத்தியதால் முழங்காலிடவில்லை என்றும், மற்றபடி தனக்கு இனவெறி கிடையாது என்றும் குயின்டன் டி காக் இந்த கடிதத்தின் சாராம்சமாக கூறியுள்ளார். முழங்காலிட குயின்டன் டி காக் சம்மதித்திருப்பதால் அடுத்த போட்டியில் அவருக்கு தென் ஆப்பிரிக்க அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications