எடப்பாடி ஒரு சர்வாதிகாரி.. ஜெ. வகித்த பதவியை வகிக்க மாட்டேன் என்றார்.. வெளுத்து வாங்கிய புகழேந்தி!
ஈரோடு: ஜெயலலிதா வகித்த பதவியை வகிக்க மாட்டோம் என கூறிவிட்டு, இப்போது பொதுச் செயலாளர் பதவியை சர்வாதிகாரி எடப்பாடி பழனிசாமி அடைய துடிப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் சரியான கேள்விகளை கேட்பதாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுவை சந்திப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் நிர்வாகியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால் முதல் முறையாக ஆளுநர் வெளிநடப்பு செய்திருக்கிறார். மக்களுக்கு பயனுள்ள வகையில் ஆளுநர் அறிக்கை இருக்க வேண்டும்.

ஆளுநர் விவகாரம்
திராவிட இயக்க தலைவர்களின் பெயரை ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லாதது வேதனை அளிக்கிறது. ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தகராறு நீண்டு கொண்டே சென்றால் இதன் முடிவு எங்கே செல்வது என்று தெரியாது. சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் அருகில் உட்கார முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சினை செய்தார். ஆனால் கூட்டத்தொடரில் அவருக்கு அருகில் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார்.

இபிஎஸ்
கொடநாடு என்ற பேச்சை முதலமைச்சர் எடுத்ததும் எடப்பாடி பழனிசாமி எழுந்து வெளியே சென்றுவிட்டார். ஆளுநர் உரை தொடர்பாக பேச்சு நடக்கும்போது கொடநாடு பிரச்சினையை ஏன் பேசுகிறீர்கள் என்று தைரியமாக சட்டசபையில் அவர் கேட்டு இருக்கலாம். அவர் அமைதியாக வெளியேறியது பலருக்கு புரியாது. அதற்கு காரணம் கொலை, கொள்ளை என்று எதைப்பற்றி பேசினாலும் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கக்கூடாது என்பதுதான்.

காழ்ப்புணர்ச்சி
அதை நிரூபிக்கும் வகையில் சபாநாயகரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். சட்டசபை துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியை விட்டுவிட்டு செயல்பட்டால் அதிமுக எதிர்காலம் சிறப்பாக இருக்கும். ஜெயலலிதா வகித்த பதவியை வகிக்க மாட்டோம் என கூறி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கினர்.

சர்வாதிகாரி இபிஎஸ்
இரட்டை தலைமையை கொண்டு வந்தனர். ஆனால் இன்று பொதுச்செயலாளர் பதவியை சர்வாதிகாரி எடப்பாடி பழனிசாமி அடைய துடிக்கிறார். உச்சநீதிமன்றம் கண்களை திறந்துவிட்டது. அனைத்து கேள்விகளையும் கேட்டு வருகிறார்கள். அங்கே ஏமாற்றவே முடியாது. இந்த தீர்ப்பை பொறுத்தவரை சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக இருக்கும். ஓபிஎஸ்-க்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாக இது இருக்கும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications