ஈரோடு கிழக்கு தொகுதி ட்விஸ்ட்.. என்னது திமுகவில் சேரப்போகிறேனா? படபடத்த தேமுதிக வேட்பாளர் ஆனந்த்
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியின் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் திமுகவில் இணைய இருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த், தாம் திமுகவுக்கு தாவப் போவதாக வெளியான செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் அத்தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..அரசு ஊழியர்கள் வாக்குகள்..திமுகவிற்கு நிச்சயம் கிடைக்கும்..அன்பில் மகேஷ்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் கூறுகையில், நான் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு எதையும் எதிர்பாராமல் பிரசாரத்தை தி.மு.க.வினர் தொடங்கி இருந்தனர். காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகள்தான் வேறு வேறு.. ஆனால் அனைவரும் மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர். அனைவரும் ஒன்றுதான். என்னுடைய தாத்தா தந்தை பெரியார் ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்தபோதுதான், முதல்முதலில் குழாயில் குடிநீர் வரும் வசதி செய்யப்பட்டது. தமிழகத்திலேயே முதல்முறையாக ஈரோட்டில் தான் செய்யப்பட்டது. என் மகன் திருமகன் ஈவெராவும் கடந்த ஒன்றரை ஆண்டுகள் மக்களுக்காக பாடுபட்டார். என் மகனை நான் இழந்துவிட்டேன் என்பதைவிட ஒரு நல்ல இளைஞரை ஈரோடு கிழக்கு தொகுதி இழந்துவிட்டது என்பதுதான் வருத்தம் என்றார்.
அதிமுக சார்பிலும் 106 பேர் கொண்ட பிரம்மாண்ட தேர்தல் குழுவை இபிஎஸ் அணி அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக இபிஎஸ் அணியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியானது காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.
தேமுதிக சார்பாக ஆனந்த், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த், திமுகவுக்கு தாவப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை ஆனந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக ஆனந்த் கூறுகையில், 2005-ம் ஆண்டு முதலே தேமுதிகவில் இருந்து வருகிறேன். தேமுதிகவின் கிளை செயலாளர் முதல் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறேன். என்னை நம்பி கட்சி தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. தேமுதிகவினர் தீவிர பிரசாரம் செய்து வருகிறோம். என் மீது அவதூறு பரப்பவே திமுகவுக்கு போகப் போவதாக வதந்தியை கிளப்பிவிட்டுள்ளனர் என்றார்.